இப்போதெல்லாம் கண்டெய்னர் லாரிகளில் என்னதான் கொண்டு வருவது, கடத்துவது என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.
இரு தினங்களுக்கு முன்னர் இரவு நேரம், கோவையில் திடீரென ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள்… அதில் கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாகப் பணம் கடத்துகிறார்கள் என்று ஒரு செய்தி பரப்பி விடப் பட்டது.
சமூக வலைத்தளங்களில் பரவிய அந்தச் செய்தியால், அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்கள் பலரும், கண்டெய்னரை திறந்து காட்டவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அந்த கண்டெய்னருக்குள் டீத்தூள் பொட்டலம்தான் உள்ளன. அவை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகின்றன என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அதைத் திறந்து காட்டியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்தனர். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து பார்த்த போது, அவை டீத்தூள் பாக்கெட்டுகள் என்றே தெரியவந்தன.
இது போல், நெல்லை மாவட்டம் செங்கோட்டையிலும் கண்டெய்னர் லாரிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் நேரம் என்பதால், போலீஸார் துணையுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைகளை தீவிரப் படுத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் முறையான ஆவணங்கள் இன்றி பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே போல், 5 கண்டெய்னர் லாரிகள் போலீஸாரின் பிடியில் சிக்கின. இவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்திருக்குமோ என்று நினைத்தால் அப்படி ஒன்றும் இல்லை. எல்லாம் கழிவுப் பொருள்கள்.தான் அவையும் கண்டெய்னர் லாரிகளில் கடத்தப்பட்டு கொண்டு வரப் பட்டுள்ளன என்றால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் இருக்காதா என்ன?!
கேரள மாநில எல்லையில் இருப்பதால், கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி நாசப்படுத்துவார்கள். குறிப்பாக இறைச்சிக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கை. அப்போதெல்லாம் போலிஸார் சோதனைச் சாவடியில் கண்டு பிடித்து, அவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனத்தை சிறைப்பிடிப்பது என்று நடவடிக்கை எடுத்து வருவார்கள்.
இந்நிலையில், செங்கோட்டையில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து இறக்கிய நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளைக் கொண்டுவந்த ஐந்து கண்டெய்னர் லாரிகள் போலீஸாரால் கைப்பற்றப் பட்டிருக்கிறது. எஸ்பி., டிஎஸ்பி., செங்கோட்டை ஆய்வாளர் ஆகியோரின் முயற்சியால், கழிவுகளை அனுப்பியவர், கழிவுகளைப் பெற்றவர், லாரி ஓட்டுநர்கள் 5 பேர் என 7 பேர் மீது, செங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, கழிவுப் பொருட்களை ஏற்றி வந்த 5 கண்டெய்னர் லாரிகளும் கழிவுகளுடன் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
செங்கோட்டை நீதிமன்றத்தில் ஏப்.10 இன்று இது போல் நச்சுக் கழிவுகளை ஏற்றி வந்த குற்றத்துக்காக தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் 7 பேருக்கும் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.