சென்னை: நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். திபெத், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகார், மேற்குவங்கம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சோகத்தை பாட்டாளி மக்கள் கட்சியும் பகிர்ந்து கொள்கிறது. மனிதர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்கும் இயற்கை சில நேரங்களில் அதன் சீற்றத்தை வெளிப்படுத்தி ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரைப் பறிப்பதை என்னவென்று சொல்வதென தெரியவில்லை. நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய செய்தி கிடைத்ததும் அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. நேபாளத்தில் நில நடுக்கம் தாக்கிய பகுதிகளில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

