பொதுத்துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா? : அன்புமணி கேள்வி

Published:

சென்னை: பொதுத் துறைகள் வேலைவாய்ப்பில் தமிழருக்கு துரோகம் இழைப்பதா என்று என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கு 104 இளநிலை பொறியியல் உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கு இந்தியாவின் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசுக்கு சொந்தமான பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலைக்கு குறைவான பணியிடங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு தான் நிரப்பப்படுகின்றன. அதிகாரிகள் நிலையிலான பணியிடங்களுக்கு மட்டுமே அகில இந்திய அளவில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உதாரணமாக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ளிழிநிசி) மும்பைப் பிரிவில் 24 வகையான பணியிடங்களுக்கு 205 பணியாளர்களை தேர்வு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு இப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் சேருவதற்கான முக்கிய நிபந்தனையே விண்ணப்பதாரர்கள் மராட்டியத்தில் உள்ள ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தான். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பணிகளில் சேர முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திரத்தின் காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரியில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக(ளிழிநிசி) ஆலைகளில் 23 வகையான பணிகளுக்கு 183 பேர் அண்மையில் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அந்நிறுவனம் அறிவித்திருந்த முக்கிய நிபந்தனையும் விண்ணப்பதாரர்கள் ஆந்திராவிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது தான். அதன்படியே அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளில் சேர்க்கப்பட்டனர். மற்ற மாநிலங்களிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும் இதேமுறையில் தான் ஆட்தேர்வு நடக்கிறது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் அறிவித்த பணியிடங்களும், சென்னை பெட்ரோலிய நிறுவனம் அறிவித்த பணியிடங்களும் அதிகாரிகள் நிலைக்கு கீழானவை தான். எனவே, மராட்டியம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப் பட்டதைப் போல சென்னை பெட்ரோலிய நிறுவனமும் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்திருப்பவர்கள் மட்டும் தான் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். தமிழகத்தின் இயற்கை வளங்களால் தான் சென்னை பெட்ரோலிய நிறுவனம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது. அந்நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு தான் வழங்குகிறது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசுவால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் தமிழக மக்கள் தான் தாங்கிக் கொள்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயன்களை மட்டும் மற்ற மாநிலத்தவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது நியாயமானதல்ல. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், சென்னை பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இரண்டுமே பெட்ரோலிய அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் போது ஒரு பொதுத்துறை நிறுவனம் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தான் வேலை என்பதும், இன்னொரு நிறுவனம் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வேலைக்கு சேரலாம் என்பதும் முரண்பாடாகும். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றன. ஒரே நாட்டில் வெவ்வெறு மாநிலங்களுக்கு வெவ்வெறு அளவுகோல்களை கடைபிடிப்பது முறையல்ல. எனவே, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலைக்கு கீழான பணிகள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் 50 விழுக்காடு இடங்கள் அந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். – என்று கூறியுள்ளார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img