நேபாளத்தில் ஏற்பட்ட துயரம் மிகவும் வருந்தத்தக்கது அதே நேரம் இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பார் வேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது அண்டை நாடான நேபாளம்,இந்தியர்களின் தொன்மையான சுற்றுலாத் தலமாகும். வெறும் சுற்றுலாத்தலம் என்பதோடு மட்டுமல்லாது, ஆன்மீக வழிபாட்டு யாத்திரை மேற்கொள்ளும் பல லட்சம் பக்தர்களின் புனிதத்தலமாகவும் விளங்குகிறது. உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் மலை சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம், இந்தியாவுடன் கலாச்சார பண்பாட்டு உறவினையும் கொண்ட நாடாகும். அந்த நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நம்மையெல்லாம் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. காட்மண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்கள்,கிராமங்கள் என பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த நில அதிர்வில் சிக்கி, குடும்பத்துடன் புதையுண்டு போயிருக்கிறார்கள். யுனெஸ்கோவால் கண்டறியப்பட்டு,பாதுகாக்கப்பட்டுவந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சில கட்டிடங்களும்,கோபுரங்களும்கூட இந்த பூகம்பத்தினால் இடிந்து போயுள்ளன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள பலபேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரத்தில்,பீகார்,உத்தரப்பிரதேசம்,டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இந்த நில அதிர்வின் மூலம் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குறியதாகும். தகவல் அறிந்ததும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்திற்கு சிறப்பு அதிரடி மீட்புப் படையையும், உயிர் காக்கும் மருந்து, உணவுப் பொருட்கள், ஆடைகள் என அவசரத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும். அதே போல்,பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என கூறி ,அம்மாநில முதல்வருக்கு வாக்களித்துள்ளார். இயற்கையின் கொடுஞ்சீற்றத்தை மனிதனால் வெல்லமுடியாது என்றாலும், நிலைமையின் ஆபத்தை ஓரளவிற்கு தடுக்கமுடியும் என்பதே உண்மை. அந்த வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் இந்திய ஜனநாயக கட்சியும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். – என்று தெரிவித்துள்ளார்.

