சென்னை: ஞாயிற்றுக் கிழமை இன்று காலை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அரசியல் நடவடிக்கைகளால் திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழகத்தின் 5 பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகளிடம் பேசி, அவற்றை பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருப்பதாகக் கூறி முதலில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு விவகாரங்களின் தமிழக அரசின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சந்தித்தது பொதுநலம் சார்ந்து அல்ல; சுயநலம் சார்ந்துதான் என்று விஜயகாந்த் குற்றம் சாட்டினார். இதன் பின்னர் விஜயகாந்தின் திடீர் அரசியல் நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய போது, “தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பணியை ஒழுங்காகச் செய்யாத நிலையில், தமிழர்களுக்கான பணிகளை எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் செய்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் துணை நிற்கும். முதல்வர் பன்னீர்செல்வம், மேகதாது அணை பிரச்னையில் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் பிரச்னை தொடர்பாக அவர் மோடியை சந்திக்கவில்லை என்பதால் மற்றவர்களை அழைத்துச் செல்லவில்லை. இந்நிலையில், பன்னர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை விஜயகாந்த் தற்போது செய்து வருகிறார். பிரதமருடன் பேச அனைத்துக் கட்சியினரையும் அவர் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பில் ஒருவர் விஜயகாந்த்துடன் சென்று, பிரதமர் மோடியை சந்திப்பார் … என்றார்.

