பாவூர்சத்திரம் அருகே முன்விரோதத்தில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் க.மாயாண்டி(40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த மா.மணி என்ற சுப்பிரமணி(43) என்பவருக்கு எதிராக சாட்சி சொன்னாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணி என்ற சுப்பிரமணி மற்றும் அவரது நண்பரான ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்த பா.ஆனந்த்(35) என்பவருடன் சேர்ந்து மாயாண்டியை அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . இதுகுறித்து மாயாண்டி அளித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சாட்சியை மிரட்டிய 2 பேரையும் கைது செய்தார். செய்தியாளர்: செ.பிரமநாயகம், தென்காசி

