முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மே 18 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சீர்காழி உப்பனாற்றாங்கரையில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு தர்ப்பணம், தமிழீழம் மலர்ந்திட கூட்டு பிரார்த்தனை ஆகியவை நடைபெற உள்ளது. இதனை இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறிய போது… முள்ளிவாய்க்கால் நினைவு தினம். தமிழகமெங்கும் தர்ப்பணம் -தமிழீழம் உருவாக்கிட கோரிக்கை. பௌத்த மத வெறியர்களாலும், சிங்களப் பேரினவாத இலங்கை அரசாங்கத்தாலும் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வகுடி மக்களான இந்து தமிழர்கள் துன்புறுத்தப் படுகின்றனர் .
தமிழர்களை அழித்தொழித்து தமிழர்களின் ஆதி தாயகமான இலங்கையில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றி விரட்டியடிக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இலங்கை அரசுகள் செயல்பட்டு வருகின்றன .
கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் ராஜபக்சே அரசாங்கம் அப்பாவித் தமிழர்களின் மீது தடை செய்யப்பட்ட கொத்து எறி குண்டுகளை வீசி படுகொலை செய்தது.
ஒரே நாளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறுதிச் சடங்குகளை கூட முறையாக நடத்திட சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை வருடம் தோறும் இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது.
இந்த ஆண்டும் வருகிற மே 17ஆம் தேதி வாரணாசி – காசியில் தமிழீழம் மலர்ந்திட கூட்டுப் பிரார்த்தனையும் , மே -18ஆம் தேதி இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் கங்கைக்கரையில் நடைபெற உள்ளது.
காசியில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொள்கிறார் . அதே சமயத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நதிக்கரைகளிலும் தர்ப்பண நிகழ்வும் கோயில்களில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
இலங்கை தமிழர்கள் சம உரிமையுடனும், சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பாரதப் பிரதமரை இந்து மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. இந்து கோயில்களில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றி விட்டு புத்தர் சிலைகளை வைப்பது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை இராணுவ மயமாக்கி வைத்திருப்பது இன்றும் நடக்கிறது.
இந்து சமயத்தின் பழமையான அடையாளங்களை அழித்து வருகின்றனர். ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாரதப்பிரதமர் செயல்பட வேண்டும்… என்று கூறினார்.