சென்னையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப் பட்டது! அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் முடிவு செய்யப் பட்டது.
சென்னையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை எடுக்க உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் இன்று மே 27-ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் தனியார் குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும், பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கும் சூழலில் கொண்டு செல்லும் என்று கூறப் பட்டது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் தாங்கள் அறிவித்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.