ராகுல் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி மாவட்டச் செயலாளா்கள் தீக்குளிக்க முயற்சி: காங்கிரஸ் பேரணியில் பரபரப்பு!

07 June20 ragul

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சயின் தலைவா் ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர். அப்போது 2 மாவட்ட நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல்காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

இந்தநிலையில் ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது.

அப்போது வடசென்னை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணி முடிவில் காமராஜர் அரங்க வளாகத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி சமூகநலத்துறை மந்திரி கந்தசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், எச்.வசந்தகுமார், கார்த்தி ப.சிதம்பரம், டாக்டர் கே.செல்லக்குமார், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் கே.சீரஞ்சிவி, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், எஸ்.சி.பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் வடசென்னை மாவட்ட செயலாளர் ரியாஸ் திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் ராகுல்காந்தி ராஜினாமா செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பேசினார்.

அந்த தீர்மானம் வருமாறு:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பு ஏற்பதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ராகுல்காந்தி எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார் என்பதை இக்கூட்டம் உறுதியாக கூற விரும்புகிறது.

இன்றைக்கு இந்தியாவுக்கு வகுப்புவாத சக்திகளால் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இந்த சோதனையில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் ஆற்றல்மிகு தலைவராக ராகுல்காந்தி விளங்குகிறார்.

தற்போது ஏற்பட்டிருக்கிற தோல்வி தற்காலிக சறுக்கலே தவிர, வீழ்ச்சியல்ல.

எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிற தோல்விக்கு தலைவர் ராகுல்காந்தி காரணம் என எவ்வகையிலும் கூற முடியாது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சோதனையான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தொடர்ந்து ஏற்று அவர் வழிநடத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மான நகல் ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.