நான் டிவி.,க்களில் மோடி பிரதமராக மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி குறித்துதான் பாக்கிறேன். இன்னும் நேசமணி நியூஸ்லாம் பாக்கல.. அதெல்லாம் கடவுள் கொடுத்த கிஃப்ட்.. என்றார் காமெடி கிங் வடிவேலு.
வடிவேலு நடித்த ஃப்ரெண்ட்ஸ் படத்தில் இடம் பெற்ற காட்சியும் கதாபாத்திரமும் இப்போது திடீரென சமூகத் தளங்களில் வைரலாகிவருகிறது. நேசமணிக்கு என்ன ஆச்சு, நேசமணி குணமாக பிரார்த்தனை,… என ஹேஷ்டேக்குகள் தூள் பறந்தன.
இந்நிலையில், நேசமணி ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் ஒரு கலக்கு கலக்குவது குறித்துக் கூறி, வடிவேலுவின் கருத்தை அறிய முற்பட்டிருக்கிறார்கள் செய்தியாளர்கள். பலரும் வடிவேலுவுக்கு போன் செய்து, அவர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த வடிவேலு, “இந்த நேசமணிக்குக் கிடைத்த புகழ் எல்லாமே ஃப்ரண்ட்ஸ்' டைரக்டர் சித்திக்கையே சேரும். ஏன்னா, நேசமணின்னு ஒரு கேரக்டரை உருவாக்குனதே அவர்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல காமெடியில எனக்குத் தோணுற சின்னச் சின்ன ஐடியாக்களை அவர்கிட்ட சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னதில்லை.
ஓகே வடிவேலு’னு ஏத்துக்கிட்டு சுதந்திரம் கொடுத்தார். அப்படியொரு பெருந்தன்மைகொண்ட டைரக்டர் சித்திக். கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, சுராஜ்… வி.சேகர் இவங்க ஒவ்வொருத்தரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நகைச்சுவை மன்னர்கள்.” என்றார்!
தொடர்ந்து… நீங்க நேசமணி டிரெண்ட்ல இருக்குன்னு சொல்றீங்களே, டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதுக்குக் காரணம். நான் நேசமணி டிரெண்டிங்ல இருக்கிறதை இன்னும் பார்க்கல! மோடி பதவியேற்கிறாரே… அந்த நியூஸ்தான் எனக்குத் தெரியும். இந்த நேசமணியை நான் இன்னும் பார்க்கல!” என்றார்.