முன்விரோதம் காரணமாக காவல் ஆய்வாளர் ஒருவரால் கூலிப்படை வைத்து வெட்டப் பட்டதாகக் கூறப் படும் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் டிவி செய்தியாளர் திருநெல்வேலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரை சக பத்திரிகையாளர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பாலிமர் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது தூத்துக்குடி எஸ்பி ஆபிஸில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் முத்துவேல் அந்த செய்தியினை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் சண்முகநாதன் என்ற ரவுடி மூலம் கூலிப்படையை அமர்த்தி, கவனிக்கச் சொல்லியுள்ளார்.
அந்தக் கூலிப்படையினர், நேற்று இரவு 9 மணி அளவில் முத்துவேல் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் திருநெல்வேலி பாளை. ஹைகிரவுண்டுக்கு மாற்றப் பட்டார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு போலீசாருக்கும் அப்பகுதி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் சக பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாளை ஹைகிரவுண்டில் இன்று முத்துவேலை சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர்.




