காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கோயில் குருக்களாக பணியாற்றிய ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1500 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சுவாமி சிலைகள் சேதம் அடைந்து விட்டன என்று கூறி புதிதாக ஐம்பொன் சிலைகள் செய்வதற்கு ரூபாய் 2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது
ஆனால் இந்த தங்கத்தை சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆலய முன்னாள் குருக்கள் ராஜப்பா, விசாரணை காலத்தின் போது, கனடா நாட்டுக்குச் சென்றிருந்தார். அவர் இங்கு இல்லாத நிலையில் இந்தியாவுக்கு அவர் திரும்பி வரும்போது, அவரைப் பிடித்து உடனடியாக தகவல் அளிக்கும்படி விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்!
இந்நிலையில் கனடாவில் இருந்து நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார் ராஜப்பா குருக்கள். அவரை மும்பை போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்!
இதை அடுத்து ராஜப்பா குருக்களை ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!