அண்மையில் வெளியான தர்மபிரபு என்ற படம், சமூகத் தளத்திலும் அரசியல் களத்திலும் பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. ஹிந்துக் கடவுளர்களை கேலி கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, மிகவும் கீழ்த்தரமான செய்கைகளையும் கொச்சை வசனங்களையும் வைத்து இந்துக்களை உசுப்பேற்றியிருக்கிறார்கள்.
அதுபோல், துக்ளக் ஆசிரியராக இருந்த அமரர் சோ ராமசாமி குறித்த நாலாந்தரக் காட்சிகள், வசனங்களை வைத்து, அவரது புகழையும் இமேஜையும் சீர்குலைத்திருக்கிறார்கள். குறிப்பாக, திரைப்படங்கள் மற்றும் திரைத்துறையினரின் அராஜக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாமக., நிறுவுனர் ராமதாஸ் குறித்த கிண்டல், கேலிகளால் பாமக.,வினர் ரொம்பவே கொதித்துப் போயுள்ளனர்.
தர்மபிரபு படக்குழு நிச்சயம் தர்ம அடி வாங்கும் என்று பரவலாக சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வந்த நிலையில், மற்ற எந்தப் பிரச்னைகள் குறித்தும் கண்டு கொள்ளாத தர்மபிரபு படக்குழுவினர், பாமக.,வைக் கண்டு மட்டும் அச்சம் கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, தங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்துச் சொல்லி, ராமதாஸ் மற்றும் பாமக., தொண்டர்களின் கோபத்தை அடங்கச் செய்வதற்காக, ராமதாஸை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இன்று ராமதாஸுக்கு தர்மபிரபு படத்தின் பிரத்யேக காட்சியைப் போட்டுக் காட்டி, வசனங்கள், காட்சிகள் குறித்து அவரை கோபம் கொள்ள வேண்டாம் என்று சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப் படுகிறது.


