சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.இந்நிலையில் இரவு நேரம் என்பதால் சிறிது கண் அசந்த நேரத்தில் தனது 3 வயது குழந்தையை தொலைத்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மத்திய ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினர் தனது 3 வயது ஆண்குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர். இரவு 11:45 மணி என்பதால் இரவு உணவு அருந்தி விட்டு தனது குழந்தையுடன் ஓய்வு எடுத்துள்ளனர். சிறிது நேரம் பெற்றோர்கள் இருவரும் அயர்ந்து தூங்கிய நிலையில் குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்தது சிறிது நேரம் கழித்து அவர்கள் விழித்து பார்த்தபோது அவர்கள் குழந்தையை காணவில்லை.
இதுகுறித்து ரயில்வே அலுவலகத்தில் தங்களது குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்ததின் பேரில் ரயில்வே போலீசார அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது ஒரு நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வதை பார்த்து உள்ளனர்.
அந்த நபர் பார்ப்பதற்கு அலுவலகம் செல்லும் நபர் போலவே இருந்துள்ளார்,கையில் ஒரு சிவப்பு கலர் பையை வைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தங்களது குழந்தையை கண்டு பிடித்து தருமாறு பெற்றோர்கள் காவல் துறையினரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டுள்ளனர்.
புகாரை பெற்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அருகில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிப்பும் செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் அரக்கோணம் போன்ற ரயில் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையை கண்டுபிடிக்கும் பணியினை தீவிரமாக்கி வருகின்றனர்.