
காஞ்சிபுரம்:
ஆட்சித் தலைமையை அன்று குன்ஹா சிறைக்கு அனுப்பி வைத்தார், இன்று குட்கா அனுப்பி வைக்கப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மண்ணிவாக்கத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டுப் பேசினார்.
அப்போது அவர், தமிழகத்தில் நடைபெறுவதை ஆட்சியாகக் கருதவில்லை, காட்சிப் பொருளாக தான் கருதுகிறோம். ஜெயலலிதா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது அல்ல. குதிரை பேர ஆட்சி. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையே 1.1 சதவீதம் வாக்குகள்தான் வித்தியாசம். தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் மக்கள் பிரச்னைகளை கவனித்து வருகிறது. மக்களோடு சேர்ந்து போராடுகிறது. ஏரி, குளங்களை அரசு தான் தூர்வார வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியான தி.மு.க. அதை செய்து வருகிறது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படங்களை நாம் முறையாக வெளியிட்டு வருகிறோம். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது அவர்களின் சிகிச்சை முறைகள் குறித்து தினமும் மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கூறுகிறார். இந்த ஆட்சியின் தலைமையை அன்று குன்கா சிறைக்கு அனுப்பினார். ஆனால் தற்போது குட்கா இந்த ஆட்சியை ஜெயிலுக்கு அனுப்பிவைக்கப்போகிறது. டி.ஜி.பி. மீது இதுவரை லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தது இல்லை. தற்போது முதல் முறையாக வந்துள்ளது. ஆட்சியை நாங்கள் கவிழ்க்க தேவை இல்லை. அ.தி.மு.க.வினரே ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தானாகவே இந்த ஆட்சி கவிழும் என்று பேசினார்.




