ஓமலூர் டோல்கேட்டில் திமுக முன்னாள் எம்பி போலீசாருடன் தகராறில் ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சேலம் முன்னாள் திமுக எம்பி நேற்று இரவு ஓமலூர் டோல்கேட்டில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வழியே வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சேலத்தை அடுத்த ஓமலூர் டோல்கேட்டில் நேற்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து திமுக முன்னாள் எம்பி அர்ஜுனன் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது தான் முன்னாள் எம்பி என்று கூறியதால் அதற்கான அடையாள அட்டையை காட்டுமாறு போலீசார் அவரிடம் கேட்டுள்ளனர்
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே எஸ்ஐ., ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த போலீசார் முன்னாள் எம்பி அர்ஜுனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே அர்ஜுனன் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அர்ஜுனன் ஒரு காவல் அதிகாரியை எட்டி மிதிக்கும் காட்சி இருந்ததால், இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.