சேலம் அருகே அரசு பஸ்ஸில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

Published:

சேலம்: சேலம் அருகே அரசு பஸ்ஸில் திடீரென தீ பிடித்தது. சமயோஜித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மாலை 4.10க்கு மதுரைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 38 பேர் இருந்தனர். பஸ் மாலை 4.40க்கு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் வீராசாமிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்சில் டீசலுடன் கலந்து ஏதோ எரியும் வாசனை வந்துள்ளது. அந்தப் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை இருப்பதால் அந்த துர்நாற்றமாக இருக்கலாம் என அனைவரும் நினைத்தனர். ஆனால், சந்தேகம் அடைந்த நடத்துனர் முருகேசன் ஓட்டுநர் குப்புசாமியிடம் தெரிவித்து பஸ்சை நிறுத்தச் சொன்னார். உடனடியாக பஸ்சை ஓரமாக நிறுத்தி இறங்கிப் பார்த்தனர். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் பகுதியில் வயர் ஒன்று தீப்பொறி பட்டு கரும்புகை வெளியேறத் தொடங்கியது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப் பட்டனர். அந்த நிலையிலேயே பஸ் மளமளவென எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பின்னர், தீ எரிவது கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் பஸ் முழுமையாக எரிந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img