
திருமங்கலம் – மதுரை இடையிலான இரட்டை ரயில் பாதை பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று திருமங்கலத்திலிருந்து மதுரைக்கு அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மதுரை – திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய இரட்டை ரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் திங்கள்கிழமை ஆய்வு பணி மேற்கொண்டார்
முதற்கட்டமாக மதுரை – திருமங்கலம் இடையே காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து ரயில் சக்கரத்தில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு தேங்காய் பழம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 2.40 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு வண்டி உட்பட நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ரயில் 120 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது ரயிலின் வேகத்தில் தண்டவாளத்தின் உறுதி தன்மையை கணக்கிட கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு வண்டியில் அமர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் வேளையில் பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய இரட்டை ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புதிய இரட்டை பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே. சித்தார்த்தா செவ்வாய்க்கிழமை அன்று ஆய்வு செய்ய இருக்கிறார்.
அதிவேக ரயில் இன்ஜினில் இணைக்கப்பட்ட 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.




