மைசூர், குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
இந்த தசரா விழாவின் 11ஆம் நாளான இன்று அதிகாலை பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளினார். இன்று காலை பாளை ராமசாமி கோவில் திடலிலும், மதிய வேளையில் ராஜகோபாலசுவாமி கோவில் திடலிலும் , மாலை 6மணிக்கு மேல் பாளை மார்க்கெட் திடலிலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். அப்போது பல இடங்களிலும் இருந்து மக்கள் பெருவாரியாகக் கூடுகின்றனர்.
இங்கெல்லாம் அனைத்து அம்மன்களும் ஒன்றாகக் கூடி, மக்களுக்கு அருள்பாலித்த பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் பாளை சமாதானபுரம் பல்க் மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும். இந்த நிகழ்வுகளால் இன்று பாளையங்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சி தருகிறது.


