மதிப்புக்குரிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு . நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்* மற்றும் இதர பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்* அனைவருக்கும் வணக்கம்.
எனது பெயர் ராம்பாபு . ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 30 ஆண்டுகால உறுப்பினர். திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிக்காக வேலை செய்தவர்களின் நானும் ஒருவன்.
சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்த உரை பற்றி தங்களிடம் சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன். சட்டமன்ற உறுப்பினர் திரு .ஈஸ்வரன் என்பவர் ஜெய்ஹிந்த் கோஷத்தை திமுக அரசு நீக்கியது பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.
அந்த கோஷத்தின் மகத்துவம் பெருமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சுதந்திரத்துக்காகப் போராடிய ஒவ்வொரு இந்தியனின் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஜெய்ஹிந்த் கோஷம் .
இன்றும் நமது ராணுவ வீரர்களின் வெற்றிக் கோஷம் ஜெய்ஹிந்த் கோஷம். இந்தியா முழுவதையும் இந்தியன் என்ற உணர்வோடு இணைக்கும் மந்திரச் சொல். அப்படிப்பட்ட ஒரு சொல்லை மாட்சிமை மிகுந்த ஒரு இடத்தில் தங்கள் முன்னிலையில் ஒருவர் இழிவுபடுத்தும் போது அதைக் கண்டித்து குரல் எழுப்புவதற்கு பாரதீய ஜனதா சித்தாந்தத்தில் ஊறித் திளைத்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
பிறப்பால் நான் ஒரு இந்தியன் என்ற உணர்வே போதுமானது. அப்படிப்பட்ட ஒரு உணர்வு உந்துதலால் நீங்களும் மற்ற பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து பேசி கோஷமிட்டு வெளிநடப்பு செய்து இருக்கலாம். அதை கடுமையாகப் கண்டனம் தெரிவித்து பேசி ஈஸ்வரனை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருக்கலாம். அல்லது வெளிநடப்பு செய்து செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்து பேட்டி கொடுத்து இருக்கலாம்.
எத்தனையோ முறைகள் இருந்தும் தாங்கள் நால்வரும் அமைதியாக இருந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகிறது. இந்த இயக்கமானது எத்தனையோ தியாகிகளின் தியாகங்களை தாங்கி வளர்ந்து கொண்டிருக்கிறது.
நமது இயக்கத்தில் உள்ள அனைவரின் ஒரே குறிக்கோள் நமது நாடு வல்லரசாக வேண்டும். உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்பது மட்டுமே.
தேசப்பிரிவினை , கட்டாய மதமாற்றம் , ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி, போன்றவற்றுக்கு பதிலடி கொடுப்பதற்காக தான் உங்களைப் போன்றே தேசிய சிந்தனை உள்ளவர்களை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் ஆக்கி உள்ளார்கள். ஆனால் நீங்கள் நால்வரும் மௌனியாக இருந்தது எங்களுக்கு எல்லாம் கடுமையான வருத்தத்தையும் மன உளைச்சலையும் உண்டு பண்ணியுள்ளது.
தேசத்திற்கு ஒரு ஆபத்து என்றால் குரல் கொடுப்பதற்கு இந்துவாகவும் முஸ்லிமாகவும் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி காரராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நான் இந்தியன் என்ற பெருமித உணர்வை போதுமானது.
அன்புடன்
நெல்லை ராம்பாபு