கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியாதவாது,
கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன. 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 34 ஆலயங்களும், 108 வைணவ ஆலயங்களில் 9 ஆலயங்களும் குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலேயே காணப்படுகின்றன. இதனால்தான் கும்பகோணம் “கோவில் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை பேரும் பங்கு பெறுகிறார்கள். இவ்வாறு நடைபெறும் அடுத்த மகாமகம் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மகாமகத்தை முன்னிட்டு வட இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புனித யாத்ரீகர்கள் கும்பகோணம் வந்து கொண்டிருக்கின்றனர். ரயில்நிலையம் அருகில் மகாமககுளம் உள்ளதால் அங்கிருந்து நடந்தே வந்து விடலாம் என்பதால் பெரும்பாலானவர்கள் ரயிலிலேயே வருவார்கள். இவ்வாறு கும்பகோணம் வரும் யாத்திரீகர்கள் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வராமல் யாரும் செல்வது இல்லை. ஆகவே இவர்களின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு புனித இடங்களுக்கு நேரடியாக சிறப்பு ரயில் வசதி இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1. கும்பகோணம் – கன்னியாகுமரி ரயில்
கும்பகோணத்துக்கு புனித பயணத்துக்காக வரும் யாத்ரீகர்கள் வசதிக்காக கும்பகோணத்திலிருந்து ராமேஸ்வரத்துக்கு பல்வேறு தினசரி ரயில் வசதி உள்ளது. ஆனால் கும்பகோணத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதற்கு நேரடியாக தினசரி ரயில் வசதி தற்போது இல்லை. தற்போது கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர ரயில் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்திலிருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவித்து இயக்க வேண்டும்.
2. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் தினசரி ரயில்:
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேஸ்வரம் புனித பயணத்திற்காக வரும் யாத்திரீகர்கள் அவர்கனிள் அடுத்த பயணம் கன்னியாகுமரியை நோக்கி உள்ளது. இவ்வாறு வருவதற்கு தற்போது ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரத்துக்கு மூன்று ரயில் சேவை மட்டுமே உள்ளது. மற்ற நான்கு நாட்கள் ரயில்வசதி இல்லாமல் யாத்திரீகர்கள் மிகவும் அவதிபடுகின்றனர். ஆகவே கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
3. கன்னியாகுமரி – திருப்பதி தினசரி ரயில் வழி திருவண்ணாமலை:-
தற்போது கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் வசதி இல்லாமல் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆகவே கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு செல்லதக்க வகையில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்
4. கன்னியாகுமரி – வாரணாசி வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்:
இந்தியாவின் மிகமுக்கிய புனித இடமான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை நேரடியாக இணைக்க தற்போது ரயில் வசதி இல்லை. ஆனால் சென்னையிலிருந்து வாரணாசிக்கு அதிக அளவில் ரயில் சேவை உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து மதுரை சென்னை வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.
5. கன்னியாகுமரி – ஹரித்துவார் ரிஷிகேஷி வாரத்துக்கு இரண்டுநாள் ரயில்:
வடஇந்தியாவில் உள்ள மிக முக்கிய புனித இடங்களில் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷி ஆகும். இந்த இரண்டு இடங்களையும் கன்னியாகுமரியுடன் இணைப்பதற்கு தற்போது நேரடியாக ரயில் வசதி இல்லை. இந்த தடத்திலும் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த ரயில்களை அறிவித்து இயக்கும் போது கன்னியாகுமரியிலிருந்து இந்தியாவில் உள்ள மிக முக்கியாமாக உள்ள அனைத்து புனித இடங்களுக்கும் நேரடியாக செல்ல ரயில் சேவை கிடைக்கும். இது புனித பயணம் செல்லும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


