பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பின்தான் ஒரு முடிவை வேளாண் துறை அறிவிக்கிறது. அப்படி தமிழகத்தில் இதை விளைவிக்கவே முடியாது என்று அறிவித்த ஒன்றை, அதே தமிழகத்தில் அதுவும் வறட்சியின் உச்சம் நிலவும் பூமியில் விளைவித்து, தமிழகத்தை மட்டுமல்ல… இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், இவர்.
![]() |
| எம்.முருகேசன் |
சிரித்துக் கொண்டே “வாங்க! நிலத்தில் மரக்கன்று நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு வருவோம்” என்று தனது டாடா சஃபாரியில் என்னையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தென்னந்தோப்பு, பண்ணைக்குட்டைகள் என்று நான்கு கிலோமீட்டர் தூரம் கடந்து வெட்ட வெளியான ஓர் இடத்தில் சஃபாரி நின்றது.
வனத்துறை இலவசமாகக் கொடுத்த மரக்கன்றுகளை 300 ஏக்கர் நிலத்தில் நடும் பணி மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்த பின் மீண்டும் சஃபாரி புறப்பட்டது. அவரின் மகன் மதிபாலன் காரை ஓட்டி வந்தார். கிட்டத்தட்ட 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவரது பண்ணையில் 15 கி.மீ. நீளத்துக்கு கனரக வாகனங்கள் போய்வரும் அளவிற்கு தரமான சாலைகளை அமைத்துள்ளார் முருகேசன்.
![]() |
| பண்ணைக்குள் செல்லும் சாலை |
இந்தியாவில் மிகப்பெரிய பண்ணை வைத்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் நிலத்தில் கூட இப்படி சாலைகள் அமைக்கப்படவில்லை என்று தன் நிலத்தை பார்வையிட்ட வட இந்திய ஆய்வாளர்கள் கூறியதாக பெருமிதத்துடன் கூறுகிறார் முருகேசன்.
“இந்தக் கருங்குளம்தான் நான் பிறந்து வளர்ந்த மண். விவசாயக் குடும்பம்தான் எங்களுடையது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த காலம் அது. இந்த மண்ணுக்கே உரிய வறட்சி மற்றவர்களைப் போலவே என்னையும் பிழைப்பு தேடி வேறு ஊருக்குத் துரத்தியது.
அந்த சமயத்தில்தான் எங்கள் மக்கள் இந்த மண்ணைவிட்டு கொத்து கொத்தாக பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் பக்கம் வந்து கொண்டு இருந்தார்கள். இது என் மனதை ரணமாக மாற்றியது விவசாயம் மிகவும் பின்தங்கியிருந்த காலகட்டம் அது. அதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரான கருங்குளத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினேன். தென்னந்தோப்பும், மாந்தோப்பும் உருவாக்கினேன்.
![]() |
| அல்போன்ஸா மாமரங்கள் |
முதலில் எனது நிலத்தின் மண்ணை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தேன்.
செயற்கை உரங்கள் மண்வளத்தை பாழ்படுத்தும் என்பதை 25 வருடங்களுக்கு முன்பே நான் உணர்ந்து இருந்தேன். அதனால் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவது இல்லை என்ற முடிவை அப்போதே எடுத்தேன். அதற்காக 15 டன் மண்புழுக்களை வாங்கி வந்து நிலத்தில் விட்டேன். 10 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 40 மரங்கள், 8 மீட்டருக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 66 மரங்கள் நட்டேன். மண்புழுக்களால் மண்வளம் செழித்தது.
நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டம் என்பதால் 4 பண்ணைக் குட்டைகளை அமைத்தேன். அதன்மூலம் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் வற்றாமல் பார்த்து கொண்டேன். சொட்டுநீர் பாசனம் செய்தேன். இதிலும் இரண்டு மரத்துக்கு ஒரு கேட் வால்வு என்ற கணக்கில் பண்ணை முழுவதும் கேட் வால்வு அமைத்திருந்தேன். இதனால் கடைக்கோடியில் இருக்கும் மரத்துக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. அதனால் விளைச்சல் ஒரே விதமாக இருந்தது.
பின்னர் மரத்துக்கு இடையே களைகள் வளர்ந்து விடாமல் இருப்பதற்காக 3 வாரங்களுக்கு ஒருமுறை உழுது கொண்டே இருப்போம். களை சுத்தமாக அழிக்கப்படுவதால் மரம் செழித்து வளர்ந்தது. நல்ல ஊட்டச்சத்து கிடைப்பதால் தரமான மாம்பழத்தை உருவாக்க முடிந்தது. இப்படி விளைவிப்பதோடு ஒரு விவசாயி தனது வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. அதை சந்தைப்படுத்த வேண்டும். ஒரு விவசாயி வியாபாரியாக மாறும்போது அவனுக்கு 90 சதவீதம் லாபம் கிடைக்கிறது. இந்த சந்தைப்படுத்துதல் தான் எங்கள் வளர்ச்சியின் புதிய அணுகுமுறை.
முதலில் வட இந்திய வியாபாரிகள் இதை ரத்தினகிரி மாம்பழம் என்று சொல்லி விற்கலாம். நன்றாக விற்பனை ஆகும் என்றார்கள். நாங்கள்தான் எங்களின் சொந்த பிராண்டில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தோம். அதன் பலன்தான் இன்றைக்கு ரத்தினகிரி மாம்பழத்தை விட தரத்திலும் சுவையிலும் சிறப்பான மாம்பழமாக இந்தியாவில் நம்பர் ஒன்னாக எங்களின் மாம்பழம் இருக்கிறது.
இதற்கு காரணம் நாங்கள் சமரசம் செய்து கொள்ளாமல் இருந்ததுதான். ரத்தினகிரி மாம்பழம் என்று கூறி விற்பனை செய்திருந்தால் எடுத்தவுடனேயே நன்றாக விற்பனை நடந்திருக்கும். அதே வேளையில் எங்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் போயிருக்கும். அன்று பொறுமை காத்தோம். இன்று பெருமை கொண்டோம்” என்று நீண்ட விளக்கத்தை கூறி முடித்தார் முருகேசன்.
“வட இந்தியாவிற்கு மாம்பழங்கள் போய் சேர ஐந்தாறு நாட்கள் ஆகிவிடுமே…? அதுவரை மாம்பழம் கெட்டுப் போகாமல் இருக்குமா…?” என்று கேட்டதற்கு நாங்கள் மாம்பழத்தை பறிப்பது இல்லை. காம்போடு சேர்த்து கட் செய்து விடுவோம். ஒவ்வொரு மாம்பழத்திலும் 3 அங்குலம் நீளம் கொண்ட காம்பு இருக்கும்.
![]() |
| மகன் மதிபாலன் மற்றும் தோட்ட தொழிலாளியுடன் முருகேசன் |
விவசாயம் நமது நாட்டின் முக்கியத் தொழிலாகும். விவசாயத்தில் புரட்சியும், புதுமைகளும் செய்பவர்கள் வரலாற்று ஏடுகளில் பதியப்படுகிறார்கள். காலத்துக்கு ஏற்ப வேளாண்மை துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது ஒவ்வொரு விவசாயியின் கடமை. பணப்பயிர் சாகுபடி பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்தரக்கூடிய ஒன்று.
சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்து வருகிறது. அவரது கனவு கூடிய விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.







