கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்திலும் சுனாமியின் கோரப்பசிக்கு பலர் இறந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி புரட்டி போட்டது.
மீனவர்களின் 7 ஆயிரம் கட்டுமரங்கள், பைபர் மற்றும் விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன் பிடிபடகுகள், 650 ஹெக்டேர் விவசாய நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்து சென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் பலியாகினர்.
எங்கும் சோகமயமாக காட்சியளித்தது. சுனாமி பேரலை தாக்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழக கடலோரங்களில் அதன் சோக நினைவுகள் இன்றும் அகலவில்லை.