Home Blog Page 6089

குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்

சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எட்டு பச்சிளம் குழந்தைகள் இரு நாட்களில் இறந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் இறந்த போது தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், நர்சுகள் இல்லை என்றும் மருத்துவமனைகளில் அவசர மருந்துகள் கூட இல்லை என்றும், நான் சுட்டிக் காட்டி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது இந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது. தமிழத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பணியிடங்கள் முழுவதும் நிரப்பபடாமல் உள்ளதாலும், அரசு மருதுவமனைகளிலுள்ள உபகரணங்கள் தரம் குறைந்ததாகவும், சரிவர இயங்காததும் தான் காரணம் என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக வரும் நிதியில் அரசு மருத்துவ மனைகளுக்கு வாங்கப்படுகின்ற உபகரணங்கள் தரமானதாக இல்லை எனவும், இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வு துறையிலேயே ஊழல் நடக்கின்றது என்றால் அது மக்களின் உயிரோடு விளையாடுவதாகாதா? ஒரு துறையின் அமைச்சர் இருக்கும்போது நெறிமுறைகளின் படி அத்துறையின் செயலாளர் இந்த சம்பவத்திற்காக பதிலை அளித்தால், அத்துறையின் அமைச்சரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். இவருக்கு துறையை பற்றி அதிகம் தெரிந்ததை விட அதிலிருந்து வரும் லஞ்ச பணத்தைப்பற்றி அதிகம் தெரிந்தவர் என்பதால் தான் விழுப்புரத்தில் வாய்த்திறக்கவில்லை போலும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் தமிழக அமைச்சர்களின் இன்றைய நிலையாகும். எனவே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற நிதியில் முறைகேடின்றி தரமான உபகரணங்களையும், தேவையான அளவு மருந்துகளையும் வாங்குவதுடன், மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, முழு சுகாதாரத்துடன் அரசு மருத்துவமனைகளை பராமரிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். – என்று கோரியுள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதா தோல்வி

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா தோல்வி அடைந்தார். செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் அணியே வெற்றி பெற்றது. 702 வாக்குகள் கொண்ட இந்தத் தேர்தலில் 394 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு 237 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 வாக்குகள் கிடைத்தன. முன்னதாக, நடிகை ஜெயசுதாவுக்கு இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளி மோகன் ஆதரவு தெரிவித்தார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

20ம் தேதி அஜித்தின் அதிரடி ஆரம்பம்

ajith79

அஜித்தின் 56வது பட பூஜை சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடைபெற்றது. விழாக்களில் தான் கலந்து கொள்ள மாட்டர் என்றால் படத்தின் பூஜைக்கு கூட கலந்து கொள்ளவில்லை.

அடுத்த மாதம் அஜித்தின் பிறந்த நாளன்று தல 56வது படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. தற்போது ஏப்ரல் 20ம் தேதி படப்பிடிப்பை துவங்க திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் முதன் முறையாக அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் ஏற்கனவே அஜித் படத்திற்காக 5 பாடல்களுக்கு இசையமைத்து விட்டார் என்று மற்றொரு புறம் புகைய விட்டு வருகிறார்கள் அஜித் ரசிசகர்கள்.

தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைவு

சென்னை: தங்கம் கிராமுக்கு ரூ. குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72 குறைந்து, ரூ.20,128 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,516–க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.340 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.36,765 ஆகவும், ஒரு கிராம் ரூ.39.30 ஆகவும் விற்பனையாகிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் ஏப்.30 வரை நீட்டிப்பு

திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு தொடர்பில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காவல் வரும் ஏப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரியார் திடலில் மதவெறி அமைப்புகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்: வைகோ கண்டனம்

சென்னை: பெரியார் திடலில் தி.க.வினர் தாலியறுக்கும் போராட்டத்தை நடத்தியபோது, இந்து அமைப்பினர் சிலர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நிகழ்ந்த வன்முறைகளுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், திராவிடர் கழகம் கடைபிடித்து வருகின்ற கொள்கைகளின் அடிப்படையில், அண்ணல் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தது. அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளான கருத்து உரிமை, பேச்சுஉரிமை திராவிடர் கழகத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சியும், மாட்டுக் கறி உணவு அருந்தும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழக அரசு காவல்துறை இந்த நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டும் அன்றி, காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எனவே, பெரியார் திடலில் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கி நடத்தப்பட்டன. தமிழக அரசின் மேல்முறையீட்டின்பேரில், உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவு பிறப்பித்ததால், காலை 10 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்று வந்த நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு, திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதற்கு இடையே சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் திடலுக்குள் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் இறங்கி உள்ளனர். திராவிடர் கழக அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பெரியார் திடலுக்குள் நுழைந்த மதவெறிக் கும்பல் திராவிடர் கழகத் தொண்டர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்துள்ளனர். தமிழக அரசின் காவல்துறை இந்துத்துவ மதவெறிக் கும்பலைத் தடுத்து நிறுத்தாமலும், பெரியார் திடலுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய சிவசேனா தொண்டர்களைக் கைது செய்து கடமை ஆற்றாமலும் வேடிக்கை பார்த்துள்ளனர். ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்த வந்த சிவசேனா, இந்துத்துவ வெறியர்களைத் தடுத்த திராவிடர் கழகத் தோழர்கள் மீது , காவல்துறை ஒருதலைபட்சமாக தடியடி நடத்தி இருக்கின்றது. இதில் படுகாயமுற்ற 15-க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வேலூர் சிறையில் அடைத்துள்ள செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது. பெரியார் திடலுக்குள் நுழைந்து மதவெறி கும்பல் தாக்குதல் நடத்த முயன்ற நிகழ்வு மிகவும் கவலை அளிக்கின்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ, மதவெறி சக்திகளுக்கு எதிராக, கூர்மையான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் கழகத் தோழர்களை உடனடியாகத் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். திராவிடர் கழக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சிவசேனா மதவெறி அமைப்புக்களைச் சார்ந்தோரைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், இனியும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. அதைத் தட்டிக் கேட்க கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதற்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இச்சட்டத்தின்படி பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல், தனியார் பள்ளிகள் பல்வேறு சால் ஜாப்புகளை கூறி இழுத்தடித்து வருகின்றன. இதனால் பெற்றோர் எதிர்கொள்கிற வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இதுகுறித்து தமிழக அரசு கடுகளவும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மத்திய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம்? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கடந்த 2013–14 கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்த இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் 16 ஆயிரத்து 194 இடங்கள்தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம்தான் ஒதுக்கியிருக்கின்றன. தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்து 758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகள் ஒரே ஒரு மாணவரைத்தான் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்துள்ள கொடுமை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில்தான் இவ்வளவு குறைவான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இச்சட்டப்படி பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழுக்கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது. இந்நிலையில் இச்சட்டத்தின்படி ஒதுக்கீட்டை இந்த அரசு நிறைவேற்றவில்லை”

சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ

சென்னை:
சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்என்று ம திமுக பொதுச் செயலர்  வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, ஓய்ñதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம், வரையறுக்கப்பட்ட ஊதியம், பணிக்கொடை போன்ற 34 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதுடன், சிறை நிரப்பும் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்தால் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணாமல், ஊழியர்களை மிரட்டுதல், பணியிடை நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது கண்டனத்திற்கு உரியது ஆகும். சத்துணவு மையங்களில் வெளியாட்களை வைத்து பணிகளை தொடர சமூக நலத்துறை ஏற்பாடு செய்து வருவது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. சத்துணவுப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் சொற்ப ஊதியம் பெற்று வருகின்றனர். சுமார் 55 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து வருகின்ற சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் ‘சத்துணவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால்’ எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கூறுவது அரசின் அலட்சியப் போக்கை பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது அதிமுக அரசின் அணுகுமுறை தொழிலாளர் நலனுக்கு எதிராகவே இருந்து வருகின்றது.
கடந்த மாதம் சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆறாயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியபோதும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போதும் அதிமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வெளிப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து 42 தொழிற்சங்கங்களுடன் ஆறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழக அரசு, அனைத்துத் தொழிற்சங்க பிரநிதிகளின் இசைவை பெறாமல், 5.5 விழுக்காடு ஊதிய உயர்வு என்று முடிவு செய்து, ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் சில தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஒருமித்த ஆதரவை பெறாமல், தமிழக அரசு ஊதியமாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்ததால் முக்கிய தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் மீண்டும் தீவிரமாகும் நிலை உருவாகியுள்ளது. கோடை விடுமுறைக் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
தமிழக அரசு சர்வாதிகார மனப்பான்மையை கைவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை:
விழுப்புரம் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உயிரிழந்தது பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த 8 குழந்தைகள் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த எட்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது கடந்த 6 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். கடந்த நவம்பர் மாதத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. அதன்பின் கடந்த திசம்பர் மாதத்தில் ஊட்டி மற்றும் கோவை மருத்துவமனைகளில் 4 கருவுற்றப் பெண்கள் இறந்தனர். இந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே விழுப்புரத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதற்கு முந்தைய நிகழ்வுகளைப் போலவே விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தான் இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஊழல் செய்வது ஒன்றையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளோ, மருத்துவ வசதிகளோ இல்லை என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் மருத்துவமனை மீது புகார் கூறுவதன் மூலம் ஏழைகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகத்தை மறைத்துவிடக் கூடாது.
தருமபுரியில் தொடங்கி விழுப்புரம் வரை நடந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரிழப்புக்கு  மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாதது எந்தளவுக்கு உண்மையோ, அதைவிட இரு மடங்கு உண்மை தமிழகத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளும், தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான். இந்தியாவில் கருவுற்ற பெண்களில் 50 விழுக்காட்டினரும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 75 விழுக்காட்டினரும் சத்துக்குறைவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என நேற்று முன்நாள் வெளியிடப்பட்ட பன்னாட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊட்டச்சத்து நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 விழுக்காட்டினர் வளர்ச்சி குறைபாட்டாலும்,  23 விழுக்காட்டினர் உடல் இளைப்பாலும்  26 விழுக்காட்டினர் எடை குறைவாலும், 73 விழுக்காட்டினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் 10 மாதங்களில் 1274 குழந்தைகள் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி கடந்த 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இதைவிட மோசமான நிலை காணப்படுவதாகவும், இதை மாற்ற அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக்கூட இல்லை.
இதேநிலை தொடர்ந்தால்  தமிழகத்தில் இளம் தாய்மார்களையும், பச்சிளம் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் வறுமையும், மதுவும் தான். ஏழைக் குடும்பங்களில் பெரும்பாலானவற்றின் தலைவர்கள் மதுவுக்கு அடிமையாகியிருப்பதால் அவர்களின் குடும்பத்தினருக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. நுண்ணூட்டச்சத்து  குறைபாட்டுக்கு  இதுவே முதன்மைக் காரணம்.
ஓர் அரசின் முதன்மையான கடமை மக்களின் நுண்ணூட்டச் சத்து, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் தான் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் 47 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் போதிலும், தமிழக அரசு அதைச் செய்யாமல், அதற்கு நேர் எதிராக மது விற்பனை செய்வதில் தான் தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இந்த அவமானகரமான அணுகுமுறை தொடரும் வரை நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் ஏழைக் குழந்தைகள் உயிரிழப்பதும் தொடரும் என்பது தான் வேதனையான, மறுக்க முடியாத உண்மையாகும்.
தருமபுரி மற்றும் விழுப்புரத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒரு துளி தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அது உடனடியாக ஊடகங்கள் மூலம் வெளியாகி விடுகிறது. ஆனால், கிராமப்புற மருத்துவமனைகளில் ஏற்படும் இதுபோன்ற உயிரிழப்புகள் வெளியில் தெரிவதில்லை.
இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக விழுப்புரம் உயிரிழப்புகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைப் போக்க கருவுற்ற தாய்மார்களுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் நுண்ணூட்டச்சத்து மிகுந்த உணவு  வகைகளை அரசே வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டுக்கு முக்கிய காரணம் மது தான் என்பதால் தமிழகத்தில் முழு மதுவிலக்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

முருகனுக்கு பதில் மாரியம்மன்: ‘அம்மா’வுக்காக அமைச்சர்கள் எடுத்த இளநீர் காவடி!

00039002கரூர்: அ.தி.மு.க வில் ஒவ்வொரு அமைச்சரும், அம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பக்தி என்ற பெயரில் பொதுமக்களையும், ஆண்டவனையும் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் வாட்டி வருவதை ஆங்காங்கே காண முடிகிறது. 00039001அதன் தொடர்ச்சியாக  முருகனுக்கு பிடித்த நேர்த்திக்கடனான காவடி எடுப்பது காலம் காலமாக தமிழர்கள் செய்து வந்த ஒரு நேர்த்திக்கடன் ஆனால் இன்று (17-04-15) கரூர் மாவட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைத்து தொண்டர்களும் அமராவதி ஆற்றில் இருந்து இளநீர் காவடி எடுத்து வந்து ஏதோ ஒரு முருகன் கோயிலுக்கு செல்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் கரூர் மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். பக்தகோடிகளை மட்டுமில்லாமல் விஷ்வ இந்து பரிசத், இந்து முன்னணி, பாரதீய ஜனதா கட்சியினர் என பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் இதற்கு கண்டன் தெரிவித்துள்ளனர். அதாவது எங்களது காலத்தில் முருகனுக்கு தான் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என பல வகை காவடிகளை எடுப்பது வழக்கம்.17.04.2015 karur  govt bus fire  25 passenger safe vis001 ஆனால் வழக்கத்திற்கு மாறாக அம்மா அம்மா என அம்மனையும், முருகனையும் இழிவு படுத்தும் விதமாக இந்த செயல் விளங்குவதாக பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ஊர் அருகே தளவாபாளையம் பகுதியில் தீடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 26 பயணிகள் உயிர் தப்பினர். ஒரு வேளை அதற்காக இந்த காவடியா, இல்லை போக்குவரத்து துறை ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமூக மாக முடிய வேண்டும் என இந்த காவடியா ? என பல்வேறு கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர். கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இளநீர் காவடி எடுத்தவர்களுக்கு ரூ 500 ம் அங்கப்பிரதட்சனை செய்தவர்களுக்கு ரூ 2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 00053001இது மட்டுமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த மாரியம்மன் திருக்கோயிலில் கோயில் கர்ப்பகிரகத்தை இது வரை எந்த தொலைக்காட்சியும், நாளிதழ்களில் வேலை பார்க்கும் புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் எடுத்ததில்லை. எடுக்கவும் கூடாது என்று அங்கே போர்டும் வைக்கப்பட்டுள்ளது. அம்மாவை காப்பாற்ற நினைத்து அம்மனை களங்கப்படுத்தும் செயலாக இந்த செயல் இருந்ததாக உண்மையான பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா வாழ்க என கோஷம் பாட மாரியம்மன் கோயிலை அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கப்பிரதட்சனம் செய்தார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அம்மன் கோயிலா ? இல்லை அம்மா கோயிலா என்று குமுறுலுடன் சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியினால் கரூர் ஐந்து ரோட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரை போக்குவரத்து 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது. 00064001அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் அ.தி.மு.க தொண்டர்களுக்கு தயவு செய்து ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். என்னவெனில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர் அல்லது அதிகார வர்க்கத்தில் நேர்த்திக்கடன், வேண்டுதல் என்ற பெயரில் பொதுமக்களுக்கு முழுவதும் இடைஞ்சல், முகம் சுளிக்கும் வகையில் கூட்டத்தை கூட்டி அம்மாவின் பெயரை களங்கப்படுத்துவது போல் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.