ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது அமராவதி, ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவித்து அதற்கான வேலைகளைத் தொடங்கினார். இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தன் குடும்பத்துடன் தங்கி வருகிறார்.அவர் ஆட்சியில் இருக்கும்போது தன் வீட்டுக்கு அருகில் பிரஜா வேதிகா என்ற புதிய கட்டடம் ஒன்றைக் கட்டி கட்சி சார்ந்த கூட்டங்கள், மக்களைச் சந்திப்பது போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு, பிரஜா வேதிகா கட்டடம் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடித்து தரைமட்டமாக்கினார்.இதையடுத்து, சந்திரபாபு நாயுடு தற்போது வசித்து வரும் இல்லமும் சட்டவிரோதமாக ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் சந்திரபாபு நாயுடுவும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆந்திராவின் பல பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கிருஷ்ணா நதிக்கு அருகில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீடும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. பொதுவாக ஆற்றுப் படுக்கையிலிருந்து 100 மீட்டரைத் தாண்டிதான் வீடு போன்ற கட்டடங்கள் இருக்க வேண்டும். ஆனால் சந்திரபாபுவின் வீடு அந்த விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளது என ஆளும் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
“சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், ஆற்றங்கரையிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பாதை மூழ்கி விட்டது. வெள்ளத்தினால் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஹைதராபாத்துக்குச் சென்றுவிட்டனர். கீழ் தளத்திலிருந்து அனைத்துப் பொருள்களும் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நாயுடுவின் வீட்டுக்குள் வெள்ளம் வராமல் தடுத்த 10,000 மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அவரது வீட்டிலிருந்த பாதுகாப்பு வாகனங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன” என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலச் செய்தி ஊடகமான என்.டி.டி.விக்குப் பேட்டியளித்துள்ள நாயுடுவின் மகன் நர லோகேஷ்,” வெள்ளத்துக்குப் பயந்து நாங்கள் ஹைதராபாத்துக்குச் செல்லவில்லை. அப்பாவின் கையில் அடிப்பட்டுள்ளது அதனால் மருத்துவர்கள் அவரை அங்கேயே ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டனர். நாங்கள் இங்கு உள்ளதுக்கு இதுதான் காரணம். கிருஷ்ணா நதியில் தண்ணீரின் அளவு சற்று உயர்ந்துள்ளது. ஆனால் எங்கள் வீட்டுக்கு அருகில் இல்லை. நதியிலிருந்து எங்கள் வீடு தொலைவில்தான் உள்ளது. அதனால் வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறியுள்ளார்