
கோமியம் மருந்துப் பொருளாக அறிவிக்கப்படும் – மத்திய அமைச்சர்
கோமியம் என்றழைக்கப்படும் மாட்டு சிறுநீர் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக் கருவிகள் செயல்பாட்டை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து நடைபெற்ற “புற்றுநோய்க்கு எதிரான போர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கோமியம் என்றழைக்கப்படும் மாட்டு சிறுநீர், கான்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிறந்த மருந்து ஆகும்.
கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்க திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

சேலம், மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா போன்றவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.



