சாலைகளில் பள்ளங்கள் இருப்பது சாதாரணமானது என்ற நிலை நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளது. அவற்றை எவரும் பெரிதாக கண்டு கொள்வதும் இல்லை.
நாம் பல நேரங்களில் சாலைகளில் பயணித்து இருக்கிறோம். நாம் செல்லும் சாலையில் தடுப்போ, குழி அல்லது தடையோ இருந்தால் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல், அந்த நேரத்தில் கடந்து சென்றுவிடுவோம்! அது குறித்து நாம் கவலைப் படுவதில்லை.
காரணம் சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதை சரி செய்வது நெடுஞ்சாலை துறை அல்லது சாலை நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் என்று அவர்கள் மீது சுமையை போட்டுவிட்டு நாம் கடந்து சென்றுவிடுவோம்!
ஆனால்… தேசப்பற்று அல்லது தேசபக்தி என்றால் என்ன என்பது குறித்து ஒரு விளக்கப்படம் எடுத்திருக்கிறார்கள் குஜராத்திலுள்ள தாயும் மகனும்.
குஜராத் மாநிலம் பரூச் நகரில் பிரதான சாலையில் ஒரு ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்ற மகனுடன் தாய் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த குழியில் ஸ்கூட்டி இறங்கி ஏறி அவர் சற்றே தடுமாறி பேலன்ஸ் இன்றி சாலையில் சரிந்தார். பின்னர் ஒருவாறு எழுந்து தனது வாகனத்தை தள்ளிச் சென்று, சாலை ஓரமாக நிறுத்தி வைத்தார். பின்னர் கீழே விழுந்த பையை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
அதே நேரம் மற்ற அனைவரையும் போல் அப்படியே அவர் சென்று விடவில்லை; தனக்கு ஏற்பட்ட இந்த சிறு விபத்து போல் வேறு யாருக்கும் நேர்ந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்கு ஏற்பட்டது!
பள்ளிச் சிறுவனான தனது மகனின் துணையுடன் சாலையோரத்தில் இருந்து சிறு சிறு கற்கள் மணல் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டு எடுத்து வந்து நடு சாலையில் அதனைக் கொட்டி அந்தக் குழியை நிரப்பினார். பிறகு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.
இந்த காட்சியை ஒருவர் படமாக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு பலரும் தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாய்க்கும் மகனுக்கும் அரசு விருது அளித்து கௌரவப்படுத்த வேண்டும்; சாலையையும் தமது சொந்த இடத்தைப் போல் கருதி சிறிது நேரம் அதற்காக செலவழித்து பிறர் சிரமத்தை சந்திக்க கூடாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்திய இவர்களைப் போல் சமூகத்துக்கு பயன் உள்ளவர்களை அடையாளம் கண்டு கௌரவிக்க வேண்டும் என்ற கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.