தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…! -இப்படி ஒரு டிவிட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதற்குக் காரணம், இது சிதம்பர ரகசியமாகிவிட்டதால்தான்!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐ.,யின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இரு வாரங்களுக்கு திகார் சிறை வாசம் என காவலை நீட்டித்து சிறைக்கு அனுப்பி விட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு நாற்காலி அளிக்கவில்லை, இருக்கை இல்லாமல் தாம் மிகவும் சிரமப் பட வேண்டியுள்ளது. 74 வயது கடந்த நிலையில், சிறையில் வசதிகள் போதவில்லை, காவலர்களுக்கு வைத்திருந்த நாற்காலியைக் கூட எடுத்துச் சென்றுவிட்டனர் என்றெல்லாம் புகார் கூறினார்.
ஆனால் அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதம்பரம் அங்கே வரும் முன்னர் எந்த வசதிகள் இருந்தனவோ அப்படியே தான் உள்ளது.. என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், சிதம்பரம் தமக்கு சிறை அறைக்கு வெளியில் அமர்வதற்கு இருக்கை வேண்டும் என்று கேட்டது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பேசப் பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ரசிகர் ஒருவர், “தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதனை கார்த்தி சிதம்பரம் டிட்வீட் செய்திருந்தார். எனவே கார்த்தி சிதம்பரம் சொல்லி இவ்வாறு டிவிட் போடப் பட்டிருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. மேலும், #WeStandwithPChidambaram என்ற ஹேஷ்டாக்கும் பகிரப்பட்டுள்ளது.