திருவனந்தபுரம், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யின் மனைவி, பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரத்தைப் போன்றது விதி. அதனை நம்மால் தடுக்க முடியாவிட்டால், மனமுவந்து மகிழ்ச்சியுடன் அதை அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, விதியையும் பாலியல் பலாத்காரத்தையும் தொடர்புபடுத்தி ஒரு கருத்தைப் பதிவு செய்தார். இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் – எம்.பி., ஹிபி ஈடன். இவரது மனைவி, அனா லிண்டா ஈடன்.
கேரளாவில் அண்மையில் பெய்த கனமழையில், எம்.பி., ஹிபியின் வீடு, மழை நீரில் மூழ்கியது. இந்நிலையில் அவரது மனைவி லிண்டா, சமூக வலைத் தளமான ‘பேஸ்புக்’கில் ஒருகருத்தைப் பதிவு செய்தார். அதில், ‘விதி என்பது பாலியல் பலாத்காரத்தைப் போன்றது. உங்களால் அதை எதிர்த்துப் போராட முடியவில்லை என்றால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப் பழகிக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்தின் கீழ், அவரது குழந்தை, மழை நீரில் இருந்து காப்பாற்றப்படும் காணொளியும், அவரது கணவரும் எம்.பி.,யுமான ஹிபி ஈடன், உணவை ரசித்து உண்ணும் காணொளியையும் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இந்தப் பதிவு கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பெண்கள் பெரும் கொந்தளிப்படைந்தனர். இவர் சார்ந்த கிறிஸ்துவ மதத்தில், கேரளத்தில் பாதிரியார்கள் இப்படித்தான் சர்ச்சுக்கு வரும் குடும்பப் பெண்களையும், கன்னியாஸ்த்ரீகளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தும், அது எந்த வித விளைவையும், சமூகப் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
குறிப்பாக, பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக புகார் கூறிய கன்யாஸ்த்ரீ சபையை விட்டு நீக்கப் பட்டார். அவருக்கு கடும் மிரட்டல்கள், குடும்பமே மிரட்டப் பட்டனர். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்யாஸ்திரீ வாடிகனால் கண்டிக்கப் பட்டு, அவர் துரத்தப் பட்டுள்ளார். இத்தகைய அப்பாவிகள், இந்த பாதிரியார்கள், பிஷப்புகளின் பாலியல் சுரண்டலுக்கும் இச்சைக்கும் உட்பட்டு, அடங்கி, தங்களால் எதிர்க்க முடியவில்லை என்பதற்காக, அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, அனுபவித்துக் கொள்ள வேண்டுமா? என்றெல்லாம் டிவிட்டர் பக்கத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பெண்கள் பலரிடம் இருந்து வந்த இந்த எதிர்ப்புகளால் அதிர்ச்சி அடைந்த லிண்டா, நேற்று அந்த பதிவை நீக்கினார். பின்னர், ‘தன் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்துவது தன் நோக்கம் அல்ல’ எனவும் கருத்து தெரிவித்து, தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும், இந்த பதிவு இன்னமும் சமூகத் தளங்களில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.