“நான் லஞ்சம் வாங்கமாட்டேன்!” போர்டு வைத்த கரீம்நகர் மின்சார வாரிய அதிகாரி. மேலதிகாரிகள் சொன்னாலும் “நோ!”தான்!
எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்றும் ஆதர்ச கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் நடைமுறையில் ஒரு சிலருக்கே சாத்தியம் ஆகிறது. அப்படிப்பட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
தான் நம்பும் கொள்கையை 14 ஆண்டுகளாக எழுத்துக்கு எழுத்து அப்படியே கடைப்பிடித்து வருகிறார் அசோக். ‘போடேடி’அசோக், மின்சார வாரிய அதிகாரி. கரீம்நகர் என்பிடிசிஎல் சர்கிள் அலுவலகத்தில் அசிஸ்டன்ட் டிவிஷனல் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
அலுவலகத்தில் இவருடைய நாற்காலியின் பின்னால் சிவப்பு போர்டில் வெள்ளை எழுத்துக்களில் “நான் லஞ்சம் வாங்க மாட்டேன்”, என்று தெலுங்கிலும் “ஐ ஆம் அன்கரப்டட்” என்று ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறது. மொழி வேறானாலும் பொருள் ஒன்றுதான்.
தலையைச் சொரிவது, கூழைக் கும்பிடு போடுவது… இதெல்லாம் இவருக்குப் பிடிக்காது. எந்த வேலையானாலும் முறைப்படிதான் செய்வார்.
மக்கள் அளிக்கும் விண்ணப்பங்களில் நியாயம் இருந்தால் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவையின்றியே இவரிடம் வேலை நிறைவேறிவிடும். அக்கிரமமான வழியில் மேலதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் கொடுத்து வேலையை சாதித்துக் கொள்ள நினைத்தாலும் இவரிடம் நடக்காது.
மேல் அதிகாரிகளிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவு வந்தால்தான் செய்வார். “2005இல் வேலையில் சேர்ந்த போதிலிருந்து யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வேலை செய்து வருகிறேன்” என்று தெரிவிக்கிறார் அசோக் .
இது போன்ற போர்டு வைக்க வேண்டும் என்ற யோசனை எவ்வாறு வந்தது என்று கேட்ட போது “என்னிடம் வருபவர்கள் வேலை முடிந்ததும் பணத்தை நீட்டுவார்கள். நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எனக்கு மிகவும் தொல்லையாகப் போய்விடும். அதனால் போர்டு தயாரித்து வைக்க முடிவு செய்தேன். இது குறித்து மேல் அதிகாரிகளோடு பேசி கடந்த மாதம்தான் போர்டு வைத்தேன். அப்போதிலிருந்து தொந்தரவு குறைந்துவிட்டது” என்று விவரித்தார்.
நேர்மையாக வேலை செய்வதே தன் லட்சியம் என்று கூறும் அசோக்கும் அவருடைய நாற்காலியின் பின்னால் இருக்கும் போர்டும் இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.