கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது இங்கு ஏராளமான யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இப்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படுவதால், சாப்பாடு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானைகள் வந்து விடுகின்றன. அப்படி வரும் இரவு நேரங்களில் கிளம்பி கிராமத்துக்குள் வரும் யானைகள் சுற்றித்திரிந்து தேவையான தண்ணீர், உணவு கிடைத்தவுடன் காலையில் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம்.
இந்நிலையில் பெண் யானை ஒன்று எல்லையில் குட்டி ஒன்றினை நேற்றிரவு ஈன்றுவிட்டது.. இதனையடுத்து இன்று காலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்றபோது… பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை.
அதனால் தாய் யானை அங்கேயே காத்திருந்தது.. பிறகு அந்த குட்டி யானை எழுந்து நின்றது. அதன்பிறகு அதனை அழைத்து கொண்டு காட்டுக்குள் செல்ல முயன்றது. ஆனால் காட்டுக்குள் போக முடியாத அளவுக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் தாய் யானை குட்டியை எச்சரித்து தூரமாக நிறுத்தி கொண்டது.
பிறகு வேறு வழி இருக்கிறதா என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்கிறது. மின் வேலியில் படாதவாறு குட்டியை அழைத்துக்கொண்டு பெண்யானை செல்லும் காட்சியை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனை சோஷியல் மீடியாவிலும் இப்போது பதிவிட, அது வேகமாக வைரலாகி வருகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்றுதான் உலக வன உயிரின பாதுகாப்பு தினம்.
இன்று நடந்த இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.. யானைகள் வலசை பாதையில் தொடர் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தி வருவதால் அதன் வலசை பாதைகள் மாறி யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுவது அதிகரித்து விடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாய் யானை குட்டி யானையை பத்திரமாக அழைத்து செல்லும் இந்த வீடியோ கண்கலங்க வைத்து வருகிறது.