வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அவர் செல்ல வேண்டிய பேருந்து வந்தவுடன் பேருந்தில் ஏற முயன்றார்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்கப்போது, மீண்டும் கன்னத்தில் அடித்துள்ளார்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய நபரை சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என் மனைவியை நான் அடிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு பதறிப்போன அந்த பெண், இவர் என் கணவர் இல்லை என்றும் இவர் யார் என்றே தெரியாது என்றும் கூறியுள்ளார். அதேநேரம் அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வேலூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (40) என்பதும் அந்தப் பெண் இவரின் மனைவியில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் சின்னராஜ் மதுபோதையில் இருந்துள்ளார்.
அந்த பெண்ணை தாக்கியது குறித்து சின்னராஜிடம் போலீசார் கேட்ட போது, அவர் பார்ப்பதற்கு என் மனைவி போன்று மாதிரி தெரிந்தார். அதனால் அடித்தேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சின்னராஜை காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் வேலூர் பேருந்து நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.