தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை துதித்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பாடிய ‘தங்கமயில் ஏறிவரும் எங்கள் வடிவேலவன்’ பாடல் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
அடிமைப் பெண் படத்தில் ”அம்மா என்றால் அன்பு’, ‘சூரிய காந்தி படத்தில், ஓ மேரி தில்ருபா… அன்பைத் தேடி படத்தில், சித்ர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்… வைரம் படத்தில், இரு மாங்கனி போல் இதழ் ஓரம்…. என சில தேர்ந்தெடுத்த பாடல்களைப் பாடி, தன்னை ஒரு சிறந்த பாடகியாகவும் நிலை நிறுத்தி திரை உலகில் முத்திரை பதித்துள்ளார் ஜெயலலிதா.
சினிமாவில் அவர் பிரபலமாக இருந்த காலத்தில் மறைந்த வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ”அம்மா என்றால் அன்பு” என்ற ஆல்பத்தில் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.
”தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்…” எனும் முருகன் பாடலையும், ”மாறி வரும் உலகினிலே மாறாத மாரியம்மா…” எனும் அம்மன் பாடலையும் பாடியிருக்கிறார். இந்த பாடல்களில் முருகன் பாட்டை தவசீலனும், அம்மன் பாட்டை பூவை செங்குட்டுவனும் எழுதினர்.
உலகமே கொரோனா வைரஸ் பரவலால் தவித்து வரும் இந்த நேரத்தில் கூட இந்துக்களையும், இந்து மத கடவுள்களையும் அவதூறு செய்து வருகிறது கருப்பர் கூட்டம் எனும் திராவிடர் கழகத்தை பின்னணியாகக் கொண்ட அமைப்பு. எத்தனையோ இந்துக் கடவுள்கள் குறித்து அந்த அமைப்பு வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அதில், முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பழித்து இவர்கள் பதிவிட்ட வீடியோ, இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசு அந்த அமைப்பைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா பாடிய, ”தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்…” என்ற பாடல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
- செய்தி: சதானந்தன்