
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் குறித்து இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக, தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அரசு எந்தவித புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. அதன்பேரில்,சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்களர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கொரோனா நோய் வராமல் தடுக்கும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்க சமூக இடைவெளி நிச்சயம் கடைபிடிக்கப்படும்.
1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம்.
அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கி கணக்குகள், பண பரிவர்த்தனைகள் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் ரெட் அலார்ட் சிஸ்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த அறிவுறுத்தியது. அந்த நடைமுறை செயல்படுத்த சாத்தியமில்லை .. என்றார்.