இந்திய தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 எட்டியிருக்கின்றது, இந்தியாவின் பெட்ரோல் விலை மிகபெரிய சமூக சிக்கலாக, வாழ்வாதார சிக்கலாக உருவெடுத்திருக்கும் நிலையில், இனி ஏதாவது இந்த அரசு செய்ய வேண்டும் அல்லது வரப் போகும் அரசு ஒரு கட்டத்தில் செய்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.
ஆம், உலகில் எங்குமில்லாமல் தமிழகத்தில் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்க குழப்பமான இந்திய நிர்வாக நடைமுறையே காரணம்.!
இந்தியாவில் பெட்ரோல் வாங்க ஒவ்வொரு இந்தியனும் இரு அரசுகளுக்கு வரிகட்டுகின்றான், முதலாவது மத்திய அரசு இரண்டாவது மாநில அரசு. ஒரே நாட்டில் இரண்டு அரசுகளுக்கு வரிகட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை இந்தியனுக்கு விதிக்கப் பட்டிருக்கின்றது! இதுதான் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்க காரணம்!
இதில் மத்திய அரசின் வரியினை குறைக்கச் சொன்னால் அவர்கள் அது எரிபொருள் துறை தொழிலாளர் சம்பளத்தினை பாதிக்கும், மத்திய அரசின் சில வருமானங்களை பாதிக்கும் என கண்ணை கசக்குவார்கள்! மாநில அரசிடம் சொன்னால் அதிலும் தமிழக அரசு ஆசிரியர் சம்பளம், எம்.எல்.ஏ சம்பளம் என கதறும்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களும் சில மாநில அரசு ஊழியர்களும் ஜனாதிபதிக்கு நிகரான சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்! மத்திய எரிபொருள் துறை ஊழியர்களும், தமிழக பல்கலைக் கழக மற்றும் பள்ளி பேராசியர்களும் உலகிலே அதிகம் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் எனும் பெயரினை பெற்றிருக்கின்றார்கள்!
இந்திய மக்கள்தொகையில் 5%க்கு குறைவாக வரும் இவர்களுக்காக 95% மக்களும் பெட்ரோல் விலையினை சுமக்க வேண்டியிருப்பது பரிதாபம்! பெட்ரோலை இனி ஒற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்! அப்படியே அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என ஏக கோரிக்கைகள் இருந்தாலும், முக்கியமான பிரச்சினையாக உள்ளது அரசின் பெட்ரோல் கொள்கை 1947ல் இருந்து சீரமைக்கப்படவில்லை என்பதே!
ஆம், 1950களில் சுதந்திரம் வாங்கும் பொழுது பெட்ரோல் பயன்பாடு மிகக் குறைவு! மண்ணெணெய் பயன்பாடு அதிகம்! ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும் பணக்காரர்கள் மட்டும் அன்று பயன்படுத்திய பெட்ரோலுக்கும் வித்தியாசம் இருந்ததால் பெட்ரோலுக்கு வரிகள் அதிகம் விதிக்கபட்டன!
டாட்டாவும் பிர்லாவும் இன்னும் செட்டிகள் போன்ற பணக்கார சமூகத்துக்கான பெட்ரோல் விலை ஏழை சமூகத்தில் இருந்து வேறுபட்டு நின்றது அல்லது ஏழைகளுக்கு பெட்ரோல் அவசியமில்லை! அது பின்னாளில் ஏழைகளும் பெட்ரோலை நோக்கித் தள்ளப்படும் பொழுது சீர்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை!
மோடி அரசும் இந்த 7 ஆண்டுகாலம் செய்யவில்லை! விளைவு அம்பானியும் அடிமட்ட இந்தியனும் ஒரே விலைக்கு பெட்ரோல் வாங்கும் மிகப் பெரிய கொடுமை அங்கு அரங்கேறுகின்றது! பெட்ரோல் விலை குறைய இப்போதைக்கு வாய்ப்பில்லை, அதே நேரம் இன்னும் 20 வருடங்களில் எலக்ட்ரிக் கார் உள்ளிட்டவை பெருகி எதிர்காலத்தில் குறையலாமே தவிர இப்போது அரசு ஏதாவது செய்தாக வேண்டும்!
உண்மையில் கடந்த 70 வருடங்களில் பொதுப் போக்குவரத்தில் மிகபெரிய தடையினைக் கண்டிருக்கின்றது இந்தியா! சாலைகள் வாகனங்கள் என பெருக்கினார்களே தவிர ரயில் என ஒன்றை நினைத்தே பார்க்கவில்லை!
நகரங்களுக்குள்ளும் நகரங்களை சிறு நகரங்களை இணைக்கும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துக்கள் பற்றி எந்த அரசும் சிந்திக்கவில்லை! ஆக இந்தியா மிகப் பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றது!
முதலில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும், சாலைப் பேருந்து தவிர்த்து ரயில் உள்ளிட்ட இதர பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்! பெட்ரோல் விலைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இரட்டை வரி கட்டும் கொடுமை களையப் பட வேண்டும்! அதற்காக அரசு ஊழியர் சம்பளம் மறுபரிசீலனை செய்யபட்டால் தவறே அல்ல!
ஒரே நாட்டுக்குள் மத்திய அரசுக்குள் ஒரு மாநில சிற்றரசு என்பதும் இரண்டுக்கும் வரி கட்டுதல் என்பது மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்பதை உணர்ந்து ஒரே வரியாக விதித்து அதில் உரிய பங்கீட்டினை அரசுகள் செய்யலாம்! இல்லை எரிபொருளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுக்கலாம்!
இந்தியா மக்கள்தொகையில் பெரும் நாடு, தொழிலதிபர் களுக்கும் தொழில்களுக்கும் பஞ்சமில்லை எனும் நிலையில் வருமான வரிகளை மிகச் சரியாக வசூலிக்கலாம்! அப்படி யானால் பெட்ரோல் வரியில் வெட்ட ஏதுவாகும்! முக்கியமாக பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் ஒரே பெட்ரோல் விலை எனும் கொடுமை களையப்பட வேண்டும், ரேஷனில் உள்ள வித்தியாசம் போல் பணக்காரருக்கும் ஏழைக்கும் பெட்ரோல் விலையில் வேறுபாடு வேண்டும்!
மண்ணெணெய் காலம் தாண்டி இப்பொழுது அரசுகளே சிலிண்டர் தருவோம் என்ற நிலைக்கு வந்த பின்னும் பணக்கார சமூகத்துக்கும் ஏழை சமூகத்துக்குமான எரிபொருள் நுகர்வில் திருத்தங்கள் வேண்டும்! இதை பாஜக அரசு செய்தால் நல்லது அது நிலைக்கும்!
அதை இவர்கள் செய்யாவிட்டால் அடுத்து வரும் அரசும் இத்திருத்தங்களை செய்யாமல் நிலைக்க முடியாது! 70 வருடமாக திருத்தப் படாத “எரிபொருள்” கொள்கை அவசரமாக திருத்தபட்டால் தவிர அதிருப்திகளை அரசு தவிர்க்க முடியாது!
- ஸ்டான்லி ராஜன்