கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கரூர் ஆண்டான்கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் காலை முதலே அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த போது பல்வேறு இடங்களில் அவரது உறவினர்கள் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து சோதனை நடத்தப்படலாம் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் சேகரின் வீடு, ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்துவதற்கான ஆணை பெற்று வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சுமார் 30க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தகவலறிந்து அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் திரண்டு வந்தனர். பாதுகாப்பு கருதி சோதனை நடைபெறும் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப் பட்டிருந்தனர்.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது அப்பகுதியில் உள்ள சொத்துக்களின் விவரங்களைக் கேட்டு அறிய அப்பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமிருந்து தகவலை பெறுவதற்காக ஆவணங்களைப் பெற்று சரி பார்த்தனர்.
தொடர்ந்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின், ஆண்டான்கோவில் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் சோதனை செய்யும் இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் ஆவணங்களை எடுத்து சரிபார்ப்பதற்காக கட்டைப் பையில் எடுத்து சென்றபோது அதிமுகவினர் தடுத்து இது என்னவென்று எங்களிடம் காண்பித்து விட்டு செல்லுங்கள் நீங்களாகவே ஏதாவது கொண்டு வைத்துவிட்டு பொய் வழக்குப் போடலாம் என்று கூறி அவர்களை தடுத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் உதவியுடன் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.