சிறுமியை கிணற்றிலிருந்து மீட்ட 8 வயது சிறுவன்! ஆட்சியர் பாராட்டு!

Published:

lokith
lokith

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள துலுக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி குணா. இந்த தம்பதிக்கு லித்திகா(8), நிதர்சன்(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த புதன் கிழமை மாலை குணா தன்னுடைய குழந்தைகளுடன் அப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றபோது சிறுமி லித்திகா எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குணா, உடனடியாக கிணற்றில் குதித்து மகளை மீட்க முயன்றார்.

ஆனால் குணாவுக்கும் நீச்சல் தெரியாததால், மகளுடன் சேர்ந்து அவரும் தண்ணீரில் தத்தளித்தார்.

இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது 8 வயது மகன் லோஹித், கிணற்றில் குதித்து லித்திகாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

ஆனால், குணாவை இழுக்க முடியாததால், அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து சிறுவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குணாவின் உடலை மீட்டனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குணாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை காப்பாற்றிய அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவனை பொதுமக்கள் பாராட்டினர். மேலும், அவரை பாராட்டும் விதமாக, மாவட்ட ஆட்சியர் சிறுவனை நேரில் அழைத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.

Related articles

Recent articles

spot_img