இன்று ஆடி 18. ஆடிப் பெருக்கு என்று அம்மன் கோயில்களுக்குச் சென்று, வழிபாடு செய்வதும், ஆற்றின் கரை அல்லது நீர்நிலைகளின் கரைகளில் பெண்கள் பூஜை செய்து புது தாலி எடுத்துக் கோத்துக் கொண்டு வழிபாடு செய்வதும் வழக்கமான ஒன்று. ஆனால், இம்முறை கொரோனா பரவல் ஊரடங்கு காரணம் காட்டி, அடிப்படை வழிபாட்டு உரிமைகளைக் கூட மத ரீதியான பாரபட்சம் பார்த்து, மாநில ‘விடியல்’ அரசு விதித்திருப்பது இந்து ஆன்மிக அன்பர்களை, குறிப்பாக பெண்களை பெரிதும் கோபத்தில் தள்ளியிருக்கிறது.
குறிப்பாக, பாளையங்கோட்டையில் பல அம்மன் கோவில்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காலை 10.30 மணி அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்து ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் அருள்மிகு ஆயிரத்தம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோவில்களும் உடனடியாக திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆடிப் பெருக்கை முன்னிட்டு கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பூஜைகளும் இப்படிப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகே நடைபெற்றதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இந்து ஆலயங்களை மட்டும் மூட உத்தரவிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் நெல்லை ஆட்சியர் அலுவலக வாசலில் காத்திருப்பு போராட்டம், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது.
நெல்லை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி .ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா, இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.காந்திமதிநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரமநாயகம், மாவட்ட செயலாளர் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் , சங்கர் நமசிவாயம் இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் காசிமுருகன், உழவாரப்பணி பக்தர் பேரவை மாநகர பொறுப்பாளர் ராஜகோபால், அதிமுக முன்னாள் நகர சேர்மன் வெங்கட சுப்ரமணியன், பாஜக., மாவட்ட ஓபிசி அணி தலைவர் குருசாமி, பாஜக.,|எஸ்.எம். காந்தி , பாஜக., வர்த்தகர் பிரிவு அருள்ராஜ், சமூகஆர்வலர் பிளட் உலகநாதன் , விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆறுமுகக்கனி, பாஜக., நெல்லை மண்டல பொதுச் செயலாளர் எஸ்.எம். சங்கர், முத்துராமன் தெற்கு நகர பொதுச் செயலாளர் இந்து முன்னணி நிர்வாகிகள் சுரேஷ் , விமல் ,இசக்கிராஜா, நாராயணன் ,கார்த்திக் , பாளைராஜா, இந்து வியாபாரிகள் சங்க மகாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் காவல்துறை வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறி முறையை கடைபிடிக்க மாநில அரசுக்கு தெரியப் படுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நெல்லை மாவட்டத்தில் மூன்று பிரதான கோவில்களை (காரையார், பாபநாசம் மற்றும் நெல்லையப்பர் திருக்கோவில்) தவிர மற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு எந்த இடையூறும் செய்யப்பட மாட்டாது எனவும்
மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இந்நிலையில், இன்றும் இந்து முன்னணி சார்பில் கடும் போராட்டத்துக்குப் பிறகே ஆடிப் பெருக்கு வழிபாடு அம்மன் கோயில்களில் நடைபெற்றதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.