நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் 46 வயதில் மரணம் அடைந்தது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே இதய நோய் தொடர்பாக பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதய பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் பல மடங்காக அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை, ராஜ்யோத்சவா தினத்தையொட்டி, பொது விடுமுறை என்றாலும், நெஞ்சுவலி, நெஞ்சில் எரியும் உணர்வு, கை வலி போன்ற பிரச்சினை இருப்பதாக அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
“பெங்களூரில் உள்ள ஜெயதேவா அரசு மருத்துவமனையில் மட்டும் நவம்பர் 1 ஆம் தேதி மதியம் வரை 1,500 புற நோயாளிகளைப் பார்த்தோம், மேலும் மைசூரில் இந்த மருத்துவமனை கிளையில் 1,000 புற நோயாளிகள் குவிந்திருந்தனர்.
பொதுவாக, அவசர சிகிச்சை பிரிவில் சுமார் 75 கேஸ்களை பார்க்கிறோம், ஆனால் ஞாயிற்றுக்கிழமை 550 கேஸ்களை பார்த்தோம், “என்று ஜெயதேவா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சிஎன் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், இளைஞர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் கூட பரிசோதனை செய்ய குவிந்ததாக தெரிவித்தனர். இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் குமார் கூறுகையில், அவசர அறை மற்றும் OPD ஆகியவற்றில் குறைந்தது மூன்று மடங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மக்கள் நெஞ்சு வலி தொடர்பான புகார்களுடன் வருகிறார்கள், மேலும் ECG, எக்கோ கார்டியோகிராம், TMT சோதனைகள் மற்றும் ட்ரோபோனின் போன்ற சோதனைகள் செய்ய வற்புறுத்துகிறார்கள். சிலர் கரோனரி CT ஆஞ்சியோகிராபி பற்றி விசாரித்தனர் பல நோயாளிகளுக்கு மனோவியல் அறிகுறிகள் மட்டுமே இருந்தது. நிஜமான உடல்நிலை பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
“இருதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லாத பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். புனித் ராஜ்குமார் மரணம் குறித்து தொடர்ந்து டிவியில் செய்திகளை பார்த்த பிறகு ஏற்பட்ட பீதி மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலான செய்திகளை பார்த்த பீதி காரணமாக இதுபோன்று மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்துள்ளனர்.
சிறு வலிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று மக்கள் நினைப்பது நல்ல விஷயம்தான். இவ்வாறு டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனை இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் குல்கர்னி கூறுகையில், “இப்போது மட்டுமல்ல. சிரஞ்சீவி சர்ஜா, சித்தார்த் சுக்லா போன்ற இளம் வயது பிரபலங்கள் இறந்த பிறகும் இப்படி ஒரு கூட்டத்தை பார்த்தோம். புனித் ராஜ்குமார் இறந்த தினத்தன்று, இதய நோய் தொடர்பான புகார்களுடன் வந்த நோயாளிகளால் அவசரநிலை பிரிவு நிரம்பியது,” என்றார்.
இருப்பினும், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் இதய நோய் நிபுணரான டாக்டர் ராஜ்பால் சிங் கூறுகையில், ஒரே நாளில் மக்கள் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு விரைவதை விட, மக்கள் ஒரு முழுமையான வருடாந்திர பரிசோதனை செய்தால் போதும்.
ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், சிறந்த உடல் எடையை பராமரிக்க வேண்டும், புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.
“வாரத்தில் குறைந்தது ஆறு நாட்களாவது நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது ஜாகிங் போன்ற மிதமான தீவிர உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
மிகவும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் ECG/echo மற்றும் தேவைப்பட்டால், TMT டெஸ்ட் செய்து தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார், டாக்டர் பிரதீப்.