
ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் சிறந்த நபர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் விருது வழங்கி கவுரவிக்கிறது.
அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த வேங்கடகிருஷ்ணன், மந்தைவெளியைச் சேர்ந்த ஜோதி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை, காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டி குப்பத்தைச் சேர்ந்த தினேஷ், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மானஷா தண்டபாணி, நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம்; சிறந்த மாவட்டமாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ம் தேதி தில்லியில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் மத்திய அரசால் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. இத்தகவலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் லால்வேனா தெரிவித்துள்ளார்.