சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, துவைப்பது, பெருக்குதல் என வீட்டு வேலைகளை செய்ய ஆண்களுக்கு பயிற்சியளிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பாலின சமத்துவம் என்பது தற்போது தான் சமூக வலைத்தளங்களில் பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அதை தாண்டி இயல்பு வாழ்க்கையில் வீட்டினுள் நடக்கும் கதையே வேறு.
இதைத்தான் சமீபத்தில் வெளியான தி க்ரேட் இண்டியன் கிச்சன் என்ற மலையாளத் திரைப்படம் தோலுரித்து காட்டியிருந்தது.
இந்நிலையில், வீட்டு வேலை என்பது பெண்களுக்கான பணி மட்டுமல்ல, என்பதை உணர்த்தும் வகையில் பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்தே தொடங்க புது முயற்சியை எடுத்து வருகிறது கேரள அரசு.
ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒருபகுதியாக அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
அதன்படி ஆண்களுக்கு வீட்டு வேலைகளை செய்வதற்கான செயல்முறை பயிற்சியை மாநில முழுவதும் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சமையல் கலை வல்லுநர்கள் மூலம், அரசு சேனலின் வழியாக ஆண்களுக்கு சமையல் வகுப்பு எடுக்கப்படும். வீட்டில் பாலின சமத்துவத்துக்கான அனைத்து விஷயங்களையும் உறுதி செய்யும் வகையில் ஸ்மார்ட் கிச்சன் புரோகிராம் செயல்படும்.
இந்த திட்டத்தை கண்காணிக்க குழு ஒன்று செயல்படுவதுடன் முதற்கட்டமாக இதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க கணவன் மட்டும் மனைவியின் பெயரில் ஜாயிண்ட் லோன் வழங்கப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.