புதுடில்லி: சென்ற ஆண்டு பெரும்பாலான ஆங்கில டிவி மீடியாக்கள் ஔிபரப்பிய பல செய்திகள் திரித்துக் கூறப்பட்டவையாகவே இருக்கின்றன.
அவை:
01. சர்ச் மீது தாக்குதல்: 2015ல் சர்ச் மீது தாக்குதல் என்ற செய்தி பல மீடியாக்களில் பரப்பப்பட்டது. இதனை நிருபிக்கவும், இதற்காக வாதாடவும் பல சிறிய பொய்களை கூறினர். இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டனர். அதில், இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்படவில்லை. இதில் மதரீதியான தாக்குதல் இல்லை எனவும் கூறியது. இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். ஆனால் சில மீடியாக்கள் சர்ச் மீது திட்டமிட்ட தாக்குதல் என செய்தி பரப்பின.
மற்றொரு சம்பவத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சர்ச் ஒன்றில் கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்திலும் சில மீடியாக்கள், இந்து அமைப்புகளை தொடர்பு படுத்தின. ஆனால், இந்த சம்பவத்தில் வங்க தேசத்தவர்கள் தொடர்பு உள்ளது பின்னர் தெரிய வந்தது. இதேபோல் மற்றொரு டிவி மீடியா சூதாட்டத்திற்காக கைது செய்த நபர்களை, சர்ச் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியிட்டது. இதேபோல் சில தவறான சம்பவங்கள் மத ரீதியாக தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டது.
02. மாட்டிறைச்சி விவகாரம்:
கடந்த ஆண்டு பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட விவகாரம் மாட்டிறைச்சி. மகாராஷ்டிராவில் ஜெயின் மத திருவிழாவை முன்னிட்டு, உள்ளாட்சி அமைப்பு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை மாநில பா.ஜ., அரசுடன் தொடர்புப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், மாநில அரசு மாட்டிறைச்சி குறித்துஎந்த தடையும் விதிக்கவில்லை. கடந்த 1994ல் காங்கிரஸ் ஆட்சியின் போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்து தீர்மானம் நறைவேற்றப்பட்டது. 2002ம் ஆண்டில் இந்த தடையை 9 நாட்கள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்., தேசியவாத காங்கிரஸ் ஆளும் உள்ளாட்சி அமைப்பிலும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது.
பா.ஜ., ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் மாட்டிறைச்சி குறித்து திட்டமிட்ட செய்திகள் வெளியிடப்பட்டன. 1960ல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த ஜிவ்ராஜ் மேத்தா, பம்பாய் மாகாண முனிசிபல் கார்பரேசன் சட்டப்படி மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். ராஜஸ்தானில், காங்கிரசின் கெலாட் ஆட்சியில் விதிக்கப்பட்ட 5 நாள் மாட்டிறைச்சிக்கான தடை, பா.ஜ.,வின் வசுந்தராவின் ஆட்சியில் 3 நாளாக குறைக்கப்பட்டது.
03. லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்:
கடந்த ஆண்டில் லலித்மோடி- சுஷ்மா சுவராஜ் விவகாரம் குறித்த சர்ச்சையால், பார்லிமென்டை காங்கிரஸ் கட்சி முடக்கியது. இதில், சுஷ்மா உதவியால், லலித்மோடி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றதாக செய்திகள் ஒரு டிவியில் பரப்பப்பட்டன.
ஆனால், இந்த விவகாரத்தில் விளக்கமளித்த சுஷ்மா சுவராஜ், தான் இங்கிலாந்து தூதரிடம், லலித் மோடியின் மனுவை இங்கிலாந்து சட்டப்படி பரிசீலனை செய்யுங்கள். அவர் செல்வதால், இந்தியா இங்கிலாந் உறவு பாதிக்கப்படாது என கூறியதாக தெரிவித்தார். ஆனால், லலித் மோடி வெளிநாடுகளுக்கு செல்ல சுஷ்மா உதவினார் என்ற வகையில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டன.
04. வெங்காயத்தை ரூ.18க்கு வாங்கி ரூ.30க்கு விற்றது ஆம் ஆத்மி:
கடந்த ஆண்டில், டில்லியில் வெங்காயம் விலை அதிகமாக விற்றபோது, ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெங்காயத்தை ரூ.18க்கு வாங்கி, ரூ.30க்கு விற்றதாக ஒரு டிவியில் செய்தி வெளியிடப்பட்டது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்ததாக கூறியது. ஆனால் யார் இந்த தகவலை பெற்றது யார் என அந்த டிவி கூறவில்லை.
உண்மையில், ஆம் ஆத்மி அரசு, விவசாயத்திற்கு நிதியுதவி, கடன் வழங்கும் அமைப்பிடம் வெங்காயத்தை கிலா ஒன்றிற்கு ரூ. 32.86க்கு வாங்கியுள்ளது. உண்மையில் விவசாயத்திற்கு நிதியுதவி, கடன் வழங்கும் அமைப்பு, வெங்காய மண்டியில் இருந்து கிலோ ஒன்றிற்கு ரூ.18க்கு வாங்கி இருந்தது. அதனிடம் இருந்து தான் ஆம்ஆத்மி வாங்கி மக்களுக்கு விலையை குறைத்து விற்றது.
05.இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: கடந்த ஆண்டு மும்பை தாக்குதல் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என தகவலறிந்த வட்டாரம் கூறுவதாக டிவியில் செய்தி வெளியானது. இலங்கையில், இந்த தொடரை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மையில், நவம்பர் 24ம் தேதி இந்தியாவுடனான தொடருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. 26ம் தேதி இந்திய அரசு அனுமதி வழங்கியதாக டிவி மீடியாக்கள் செய்தி வெளியானது. இது பல டிவிக்களிலும், சமூக வலைதளத்திலும் தீயாக பரவியது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், உற்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூவும் தெளிவுபடுத்தினர்.
06. ஜி.எஸ்.டி., மசோதா விவகாரம்:
சுதந்திரம் பெற்றது முதல், இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்த மசோதாவான ஜி.எஸ்.டி.,யை பா.ஜ., எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்ததாக செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், பல காலக்கட்டங்களில், பலகாரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி தான் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி பா.ஜ.,மீது குற்றம்சாட்டியது.
இதனை வைத்து பல டிவி மீடியாக்கள் விவாதம் நடத்தின. பா.ஜ., ஆளும் மாநிலங்கள், பா.ஜ.,இல்லாத மாநிலங்களும், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மசோதாவை எதிர்த்தன. அப்போது இந்த மசோதாவை, காங்கிரஸ் ஆண்ட மகாராஷ்டிரா, அரியானா, கேரளா, தமிழகம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்த மசோதாவை எதிர்த்தன. இந்த மாநிலங்கள் மதுபானங்கள் மற்றும் பெட்ரோலை ஜி.எஸ்.டி.,மசோதாவிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சிலவற்றை வலியுறுத்தின.
இதனை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் தே.ஜ., ஆட்சியில் தீர்வு காணப்பட்டது. பெட்ரோல், மதுபானங்களை ஜிஎஸ்டி மசோதாவில் இருந்து விலக்கு அளிப்பதுடன், இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வரி வசூலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது
07. மோடியின் உடை: வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக்கொள்கை, சீர்திருத்தம் குறித்து கேள்வி எழுப்பாமல், பிரதமரின் மனப்பான்மை குறித்து மீடியாக்கள் செய்தி எழுப்பின. பிரதமர் அணிந்த உடை குறித்து செய்திகள் தவறாக பரப்பப்பட்டன. ரூ. 10 லட்சம் மதிப்புள்ள உடை அணிந்ததாக செய்தி வெளியிட்டதுடன், அது குறித்து தவறாக தாங்களே கணித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
இந்த குற்றச்சாட்டுகளை, அந்த ஆடையை பிரதமருக்கு வழங்கிய நபர் திட்டவட்டமாக மறுத்தார். அதேபோல், பிரதமர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 4 நிகழ்ச்சிகளுக்காக 4 ஆடைகளை மாற்றியதாக மீடியாக்கள் கூறின. ஆனால் வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், அந்த 4 நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடைபெறவில்லை. இரண் டுநாட்களில் நடந்துள்ளது தெரியவந்தது. இதேபோல், யோகா குரு பாபா ராம்தேவ் பேட்டி குறித்தும் தவறான தகவல் டிவி மீடியாவில் பரப்பப்பட்டது.
தகவல்: தினமலர்