
பூரியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. அதே நேரத்தில், கொல்கத்தாவிலும் இன்று இஸ்கான் அமைப்பு ஜகன்னாதர் ரதயாத்திரையை நடத்தியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கலந்துக் கொண்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
மம்தா பானர்ஜி -நஸ்ரத் ஜஹான் ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தனா். வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். இவருக்கு கடந்த மாதம் தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருடன் துருக்கியில் திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி, கைநிறைய வளையல்கள் அணிந்திருந்தார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர்.
அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்று ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார். அதற்கு நஸ்ரத் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான்.
இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணியவேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மத நம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது’ என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கோல்கத்தாவில் ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரையில் பங்கேற்க நுஸ்ரத்துக்கு இஸ்கான் அமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று இன்று நஸ்ரத் இந்த யாத்திரையில் பங்கேற்றார். நஸ்ரத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோர் ரத யாத்திரையில் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரத், ‘மம்தா பானர்ஜி அவர்கள் எங்கள் அழைப்பை ரம்ஜானுக்கும் வந்துள்ளார். மேலும் எல்லோருடனும் துணையாக இருக்கிறார். இதில் எந்த அரசியலும் இல்லை.
இது முற்றிலும் நம்பிக்கையை பொறுத்தது. மதங்களையும், அரசியலையும் கடந்தே நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.


