
கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…‘
107 நாட்களுக்குப் பின்னர் கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த சில மாதங்களாக தமிழக முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. குறிப்பாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்துார் அடுத்துள்ள சாடிவயல் பகுதியில் உள்ள குற்றால அருவியில் நீர்வரத்து நின்றுபோனது.

இதனால் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிக்கு செல்ல கடந்த மார்ச் 26ஆம் தேதி வனத்துறையினா் தடை விதித்தனா்.
நீர் இல்லாததாலும் வனவிலங்குகள் நீர் தேடி அருவி பகுதிக்கு வரும் என்பதாலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் நீா்வரத்து அதிகரி்த்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை,
தற்போது வெள்ளப்பெருக்கு இல்லாத காரணத்தால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் தெரித்துள்ளார்.

மேலும், கோவை குற்றால அருவியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ ஏதுவாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
107 நாட்களுக்குப் பிறகு இன்று அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனா்.
கோவை மட்டுமின்றி திருப்பூா், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா ஆகிய பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறன்றா்.


