நீர் நிலைகள் தூர்வாரும் பணி ! இளைஞர்களின் சுயமுயற்சி ! குவியும் ஆதரவு !

Published:

thurvaruthal - 2026புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி அருகே கொத்தமங்கலம், கீரமங்கலம் பகுதியில்,  இளைஞர்கள் தன்னெழுச்சியுடன், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினர்.

இளைஞர்கள் நற்பணி மன்றத்தைத் தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டி தொடர்ந்து, 2 மாதமாக நீர் நிலைகளைத் தூர்வாரி வருகின்றனர். இவர்களின் முயற்சியால், அம்புலி ஆற்றில் வரத்து வாய்க்கால்கள், 3-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் முற்றிலும் தூர்வாரப்பட்டுள்ளன.

தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணியில் ஈடுபடும் இளைஞர்களின் முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த மாதம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி தான் பிள்ளைகளுக்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.10,000 பணத்தை, நீர் நிலைகள் பாதுகாப்புக்காக இளைஞர்களிடம் கொடுத்து அவர்களை நெகிழ்ச்சியடைய செய்தார்.

சிறுவர்களும் கூட  தாங்கள் வைத்திருந்த உண்டியல் பணத்தைக் கொடுத்தனர். இப்படி, நீர் நிலைகள் தூர்வாரும் பணி தொய்வில்லாமல், நடக்க வெளி நாடு வாழ் இளைஞர்கள் தேவையான நிதி உதவி செய்து வருகின்றனர். மேலும், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் தங்களால் முயன்ற உதவியைச் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.kothamankalam - 2026கொத்தமங்கலத்தில் பாலமுருகன் – கார்த்திகா என்பவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத்திருமணத்துக்கு கொத்தமங்கலத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் சென்றிருந்தனர்.திருமணம் முடிந்த கையோடு, புதுமணத் தம்பதி இளைஞர்களை மேடைக்கு அழைத்து தாங்கள் கையில் வைத்திருந்த ரூ.6,000 ரொக்கப் பணத்தை நீர் நிலைகள் பாதுகாப்புக்காக வழங்கினர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத இளைஞர்கள் நிதியைப் பெற்றுக் கொண்டு, மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வுகளைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி, பாராட்டியும் சென்றனர். இப்படி, இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொருவரும் தானாகவே முன்வந்து தங்களால் முயன்ற நிதியைக் கொடுப்பதால் பணி 2 மாதங்களைக் கடந்தும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

Related articles

Recent articles

spot_img