திருப்பதி: பத்மாவதி தாயாருக்கு ஏழுமலையானின் பிறந்தநாள் அன்பளிப்புகள் திருப்பதி மலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன.
பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளம் ஆன பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார்.
எனவே, பத்மாவதி தாயார் அவதரித்த பத்ம சரோவரம் திருக்குளத்தில் அவருடைய அவதார நாள் அன்று புனித நீராடுவது மிகவும் விசேஷமாகும்.
எனவேதான் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் பஞ்சமி தினமான இன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் அவருடைய அவதார திருநாளை முன்னிட்டு கணவனின் அன்பளிப்பாக பட்டு சேலை, மஞ்சள், குங்குமம் ஆகியவை உள்ளிட்ட மங்கல பொருட்கள் இன்று காலை திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானின் அன்பளிப்புகளாக திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்ட பின் யானை மீது ஏற்றப்பட்டு மங்கல பொருட்களை தேவஸ்தான அர்ச்சகர்கள், அதிகாரிகள் ஆகியோர் அவற்றை மச்சான் திருச்சானூருக்கு கொண்டு சென்றனர்.
மங்கலப்பொருட்கள் திருச்சானூரை அடைந்தவுடன் அவை பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும்.
பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பஞ்சமி தீர்த்த உற்சவம் பத்மசரோவரம் திருக்குளத்தில் நடைபெறும்.