ஆஷாட ஏகாதசி… இது மற்ற எல்லோருக்கும் என்றால் தெலுங்கு தேசத்தில் இதன் பெயர் வேறு மாதிரியானது… தெலுங்ககத்தில் ஆடி மாதத்தில் (தெலுங்கு ஆடி மாதத்தில்) வரும் வளர்பிறை ஏகாதசியை தொலி ஏகாதசி என சொல்வது வழக்கம். அதாவது தொலி என்றால் முதல் எனப்பொருள்.
இந்த தொலி ஏகாதசியை மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடும் பழக்கம் தெலுங்கு பக்கங்களில் உண்டு.
போகி, ஸங்ராந்தி பொங்கல் பண்டிகைகளை தவிர நம் இந்துக்கள் சாந்திரமான – அதாவது சந்திரனை மையமாகக் கொண்ட தெலுங்கு பஞ்சாங்கத்தின் அடிப்படையில், அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள் – இவை அனைத்தும் இந்த ஏகாதசிக்கு பிறகு தான் வரும்.
அதனால் இதை தெலுங்ககத்தில் தொலி ஏகாதசி என சொல்லு வார்கள்.
அதன் அடிப்படையில் இந்த தொலி ஏகாதசியை மிக சிறப்பாக கொண்டாடுவோம் – உபவாசம், சகஸ்ரநாம தோத்திரம் சொல்வது, கோயில் குளம் போய் வருவது என பல விஷயங்கள்.
ஏகாதசிக்கு வரும் மறு நாள் துவாதசி. வைணவ இல்லங்களில் காலையில் பூஜை அனுஷ்டானங்களை நிஷ்டையுடன் முடித்து, பாரணம் செய்வோம்.
துவாதசி அன்று காலை சாப்பாட்டை பாரணம் என்பது வைணவ பரிபாஷை. தளிகையில் (சமையலில்) செய்யப்படும் கரியமுதுகளில் (பொரியல்களில்) அகத்தி கீரை, அவரை, புடலங்காய் வகைகள் இருக்கும். மற்றும், நெல்லிக்காய் பச்சடி, மோர்க் குழம்பு, பொறித்த சாற்றமுது (ரசம்), திருக்கண்ணமுது (பாயாசம்) மற்றும் தண்ணியாக மோர். விசேஷ துவாதசிகளில் அக்காரவடிசில் செய்வது வழக்கம்.
துவாதசியன்று வாழைக்காய் கத்திரிக்காய் காய்கறிகள் நிஷேதம் – கிடையாது. பாரணம் செய்த பிறகு வருவதோ பகவத் சிந்தனையே.
வருடத்தில் வரும் இருபத்து நான்கு ஏகாதசியும் துவாதசியும் மிக சிரத்தையுடன் வைணவர்கள் அனுஷ்டிக்கிறார்கள்
- மாதவன்