“தங்கக்காசு தொலைத்த பெண்ணுக்கு-காசு கொடுத்த சம்பவம்”
லட்ச ராம நாமம் எழுதினால் ஒரு தங்கக் காசு என்ற விதியை மீறி 25000 எழுதி காசு வாங்கின பெண்ணுக்கு ஸ்ரீமடம் சட்டதிட்டங்களை மீறாமல். அதே சமயம் சிறுமியையும் வெறுங்கையுடன் அனுப்பாத பெரியவா)
(“பரிவ்ராஜக தந்திரம் – பெரியவாளுக்குக் கைவந்த கலை.!”)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சென்னை மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.
“லட்சம் ராமநாமம் எழுதியிருக்கேன்” என்று கூறி நோட்டைக் கொடுத்து, பெரியவாளிடமிருந்து ஒருபொற்காசைப் பெற்றுச் சென்றாள் ஒரு சிறு பெண்.
அப்போது ஸ்ரீமடத்தில் ஒரு நடைமுறை இருந்தது. 12500 ராம நாமம் எழுதிக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு ஒரு வெள்ளிக்காசும், ஒரு லட்சம் எழுதிக்கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு , ஒரு தங்கக் காசும் கொடுப்பது வழக்கம்.லிகிதஜபம் சிறுவர்களிடமும்,குடும்பப் பெண்களிடமும் பரவவேண்டும் என்பதற்காக அப்படி ஓர் ஏற்பாடு.மிகவும் பக்தி சிரத்தையுடன் ராம நாமம் எழுதிக்கொண்டு வந்து, நோட்டைக் கொடுத்து காசுகளைப் பெற்றுச் சென்றவர்கள் ஏராளம்.பரிசாகக் கிடைத்த காசுகளைப் பூஜையில் வைத்துப் போற்றுவார்கள்.
பெரியவாளிடம் தங்கக்காசு பெற்றுக்கொண்டு சென்ற பெண், சற்றைக்கெல்லாம் அழுது கொண்டே திரும்பினாள்.
“என்னாச்சு.?” என்று கேட்டார்கள் பெரியவா.
“தங்கக் காசு தொலைந்து போச்சு…”
“எவ்வளவு ராமநாமம் எழுதினே.?”
தயங்கியபடியே, ‘25000’ என்றது பெண்.
லட்சம் எழுதாமல், தங்கக் காசைப் பெற்றுக்கொண்டு போனதால்தான் அது காணாமல் போச்சுன்னு நினைக்கிறேன்..”
குழந்தைக்கு மிகவும் ஏமாற்றம். பொய் சொன்ன அவமானம். கிடைத்த தங்கக்காசு தொலைந்து விட்ட துக்கம்.
என்ன செய்வது.?
குழந்தை இன்னொரு காசை claim பண்ண முடியாது.
“ஆனால், குழந்தை ஏமாற்றுத்துடன் திரும்பிப் போக விடக் கூடாதே.?”
பெரியவா ஒரு தொண்டரைக் கூப்பிட்டு, தரிசனத்துக்காக வந்திருந்த அத்தனை பேர்களிடமும் பேனாவும், பேப்பரும் கொடுக்கச் சொன்னார்கள்.
“எல்லோரும் ராமநாமா எழுதுங்கோ…”
அரை மணிக்குள் ராமநாமக் காகிதங்கள் எல்லாம் பெரியவாளிடம் வந்து விட்டன.
பெரியவா, அந்தப் பெண் குழந்தையிடம் “இப்போ, லக்ஷம் பூர்த்தியாயிடுத்து. இந்தா, தங்கக் காசு!” என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
பெற்றுக்கொண்ட சிறுமி, மஹாலக்ஷ்மியாக ஜொலித்தாள்.
பெரியவா ஸ்ரீமடம் சட்டதிட்டங்களை மீறவில்லை. அதே சமயம் சிறுமியையும் வெறுங்கையுடன் அனுப்பவில்லை.
இந்த ராஜதந்திரம் – இல்லை, பரிவ்ராஜக தந்திரம். பெரியவாளுக்குக் கைவந்த கலை.!


