போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!.

Published:

“போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!” — திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா.

( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!” அப்படின்னுஉணர்த்தறவிதமா,குளிப்பாட்டினுட்டேன்!’ என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது)

18194655 1539007332811093 2764588660202570986 n - 2026
நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கணேசன் கனபாடிகள் என்பவர்,வேத பாட சாலையில் படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது

அந்தக் காலத்து மாணவர்கள் விடுமுறையில் தங்கள் ஊருக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், தங்கள் குருவிற்கு காணிக்கையாக அன்போடு ஏதாவது பொருளை வாங்கி வருவது உண்டாம்.

அப்படி ஒரு சமயம் மாணவனாக இருந்த கணேசன், தன் குருவுக்குத் தருவதற்காக காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டான். அதோடு தங்கள் ஊரில் மட்டும் கிடைக்கும், ஒரு விசேஷரக வாழைப் பழத்தையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்தான்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கி வந்ததை வாத்தியாரிடம் சமர்ப்பிக்க, கணேசனும் தான் கொண்டு வந்தவற்றை தனது வாத்தியாரிடம் சமர்ப்பித்துப் பணிந்து நின்றான். அனைத்தையும் பார்த்து மகிழ்ந்த குரு, “நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணு.எல்லா காய்கறி, பழங்களையும் அப்படியே எடுத்துண்டு போய், காஞ்சி மகா பெரியவா சன்னதியில் கொண்டுபோய் சேர்த்துடு! உனக்கு பரம க்ஷேமம் உண்டாகும்!” என்று சொன்னார்.

மாணவன் சற்று தயங்க, “இதோ பாருப்பா, அந்த நடமாடும் தெய்வம், நமக்கு எத்தனையோ வழிகள்ல அனுகிரஹம் பொழியறது. அதுக்கெல்லாம் நாம பிரதிபலனா என்ன செய்ய முடியும்? அவர் ஒரு பெரிய ஆலமரம். அந்த ஆலமரத்தைக் குளிப்பாட்ட நம்மாலே முடியாது இல்லையா> ஒருவாளித் தண்ணி இல்லேன்னாலும் ஒரு உத்தரணி ஜலமாவது ஊத்தினோம்கற மனசு திருப்தியோட நாம இப்படி அப்பப்ப சின்னதா எதையாவது அவாளுக்கு சமர்ப்பிச்சுக்கலாம். அவ்வளவுதான், புரிஞ்சுதா? தயங்காம எடுத்துண்டுபோய் சேர்ப்பிச்சுட்டு வா!”

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

குரு சொல்ல,உடனே காய்கறி,பழம் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு,மகாபெரியவாளை தரிசிக்கப் புறப்பட்டான்.

அங்கே இந்த மாணவன் சென்ற நேரத்துல மகாபெரியவா உள்ளே இருந்தார். அதனால வெளியில நின்னுண்டு இருந்தான். வேதம் கற்கும் மாணவன் என்பதால், வேதமானவரை தரிசிக்கக் காத்துண்டு இருந்த நேரத்தை வீணாக்காம வேத மந்திரம் சொல்லலாம்னு நினைச்சுண்டு தான் கத்துண்ட மந்திரங்கள் சிலதை சொல்லிண்டு இருந்தான். அந்த வேத சத்தம் கேட்டதும்,உள்ளே இருந்து வெளியில வந்தார், மகாபெரியவா.

கணேசன் அவரை விழுந்து வணங்கியபின், தான் கொண்டுவந்த காய்,கனிகளை ஒரு பெரிய மூங்கில் தட்டில் வைத்து அவர் முன் சமர்ப்பித்து பக்தியோடு நின்றான்.

“இதெல்லாம் எனக்குன்னுதான் கொண்டு வந்தாயா?”

அவர் கேட்ட முதல் கேள்வியே சிறுவன் கணேசனின் நேர்மையான பதிலை சோதிக்கும்படி அமைந்தது.

மகாபெரியவா அப்படிக் கேட்டதும், ஒரு விநாடி யோசித்தான் அவன். தன் குரு எப்போதும் பொய் பேசவே கூடாது என்று போதனை பண்ணியது நினைவுக்கு வந்தது.

ஆசிரியரோட வார்த்தைகளைக் கடைப்பிடிக்கும் மாணவனாக “இல்லை,பெரியவா. இதெல்லாம் நான் என்னோட வாத்தியாருக்குத்தான் வாங்கிண்டு வந்தேன். அவர்தான், எல்லாத்தையும் பெரியவாளுக்கு கொண்டு போய் கொடுத்துடு’ன்னு சொன்னார்”–என்று சொன்னான்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“இதெல்லாம் உங்க நிலத்திலே விளைஞ்சதோ?” ஒன்றும் அறியாதவர் போல கேட்டார்.

“இல்லை பெரியவா,எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லே”

“அப்போ காசு கொடுத்து வாங்கிண்டு வந்தியோ?” என்று அவனிடம் கேட்டதுமல்லாமல், அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்கள் பக்கம் திரும்பி, “இந்தக் குழந்தைக்கு எவ்வளவு குருபக்தி..! தன் குருவுக்காக பிரியமா இதெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கான் பாரு!” என்று பாராட்டிச் சொல்ல, கணேசனுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது

அடுத்து யாருமே எதிர்பார்க்காதவிதமாக ஒரு திடுக்கிடும் நாடகத்தை,நிகழ்த்தி அருளினார்,அந்த நடமாடும் தெய்வம். மடமடவென்று கீழே குனிந்த மகான் அந்தக் காய்கனி பரப்பப்பட்ட மூங்கில் தட்டை எடுத்து தன் தலைக்கு மேல் கொண்டு சென்று ,தடாலென்று அத்தனையும் தனது சிரசின் மேல் அபிஷேகமாகக் கொட்டிக் கொண்டார்.

சிறுவன் கணேசன் அதைப் பார்த்து திடுக்கிட்டுப் போய்விட்டான். தான் ஏதாவது தவறு செய்து விட்டோமா என்று படபடப்போடு உடல் நடுங்க ஏதும் செய்வதறியாமல் விக்கித்து நின்றான்.

அந்தத் திகைப்பைக் கண்டும் காணாவதர் போல், “போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!” என்று பெரியவா சொல்ல, வித்தியாசமான செயல் போதாதென்று இந்த புதிய திருவாக்கையும் கேட்டவர்கள் ஒன்றும் புரியாமல் திருதிருத்தார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.16 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

சிறுவன் கணேசனும் எதுவும் புரியாமல், மறுபடியும் மகானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு, பிரசாதத்தை வாங்கிக்கொண்டு தயங்கியபடியே மெதுவாக நடந்தான். அப்போது குரு சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தது.

“அவர் பெரிய ஆலமரம்.அவரை நம்மால குளிப்பாட்ட முடியுமா? ஏதோ உத்தரணி ஜலம் விடுவோம்!”

வாத்தியார் சொன்ன வார்த்தைகளுக்கு பதிலாக, “இந்த எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!” அப்படின்னு உணர்த்தறவிதமா, ‘குளிப்பாட்டினுட்டேன்!’ என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது அவனுக்குப் புரிந்தது.

அதுவரை கொஞ்சம் தளர்வாக இருந்தவன் ,குதூகலத்தோடு புறப்பட, விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் மற்றவர்கள். மகிழ்ச்சியாக ஓடிச்சென்று தன் குருவிடம் நடந்ததையெல்லாம் சொன்னான்.

நெகிழ்வோடு எல்லாவற்றையும் கேட்ட அவன் குரு, காஞ்சிமாமுனி இருந்த திசை நோக்கி சாஷ்டாங்கமா நமஸ்கரித்தார்,

Related articles

Recent articles

spot_img