“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”
(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின் பாக்கியம்)

சொன்னவர்-ஒரு பக்தர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள் பல.
பம்பாய் ஸ்ரீ அனந்தராமன் பரமபக்தர். ஒருநாள் அவருடைய கனவில், “எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?” என்று மகாசுவாமிகள் கேட்டார்கள்.
அப்பொழுது பெரியவா மஹாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா திரும்பிக்கொண்டிருந்த சமயம்.குளிர் அதிகமாக இருந்தது. அவ்வப்பொழுது குளிரினால் கால் மரத்துப் போகும்.வட இந்தியாவில் எல்லோரும் கடுகெண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொண்டு சூடேற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் தென் தேசத்திலுள்ளவர்களுக்கு அதன் மணமே பிடிக்காது.
ஸ்ரீ அனந்தராமன் வழக்கமாக வாங்கி வரும் சாமான்களுடன் கடுகெண்ணையும் வாங்கிக்கொண்டு ஸ்ரீ பெரியவாள் முகாம் இருக்கும் இடத்திற்கு வந்து, எண்ணெயைத் தவிர்த்து மற்றதையெல்லாம் சமர்ப்பித்தார்.
அப்பொழுது அணுக்கத்தொண்டர் பாணாம்பட்டு கண்ணன், “யாராவது கடுகு எண்ணெய் கொண்டு வந்திருக்கிறீர்களா? ஸ்ரீ பெரியவாள் கேட்கிறார்கள்” என்றபோது அனந்தராமன் தயக்கத்துடன், தான் கொண்டு வந்திருந்த எண்ணெயைக் கொடுத்தார்.
உடனே கண்ணன் பெரியவாள் காலில் தடவிக்கொள்ள நேற்றையிலிருந்து ‘கடுகெண்ணெய் வாங்கிக்கொண்டு வாஎன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கிடைக்கவில்லை.கொண்டு வந்த நீரும் கொடுக்காமல் வைத்திருக்கிறீரே?” என்று சொல்லிக்கொண்டே எண்ணெயை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போதுதான், பெரியவாள் தன் கனவில் வந்து கடுகெண்ணெய் கேட்டது சத்தியமான காட்சி என்பது அனந்தராமனுக்குப் புரிந்தது.


